Showing posts with label கல்வெட்டு. Show all posts
Showing posts with label கல்வெட்டு. Show all posts

Sunday, September 5, 2021

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி (செவ்வலூர் கிராமம்)மேலப்பனையூர் தேவர்மலை ஆகிய ஊர்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன் நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன் , மணிசேகரன்,  பீர்முகமதுசை.மஸ்தான்பகுருதீன்மு.முத்துக்குமார்,  பா.ரமேஷ்குமார், ஆறுமுகம்  ஆகியோரால்  மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது ,

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயற்பட்டு வந்துள்ளனர். தமது நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்கும்அவர்களின் உடைமைகளுக்கும்வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப்பொருட்களுக்கும் உரிய பாதுகாவல் பணியை செய்ய வேண்டியிருந்ததன் பொருட்டு நம்பிக்கை மிகுந்தவர்களை அப்பணியில் நியமித்து வந்துள்ளனர். அது பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் தேவர்மலைபனையூர் மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் எமது குழுவினரால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

ஆசிரியம் கல்வெட்டுகள் :

 ஆசிரியம் கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் அஞ்சினான் புகலிடம் வழங்கியதை குறிப்பாதாகவே கருதி வருகின்றனர். பாதுகாப்பு வழங்குதல் என்ற பொருளுடன் தொடர்பு படுத்தி ஆஸ்ரயம் என்ற என்ற சமற்கிருத வேர்ச்சொல்லிலுருந்து பெறப்பட்ட சொல்லாடலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.


 

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67  கல்வெட்டுகளில் ஆசிரியம் ஆசுரியம்அஸ்ரீயம்ஆஸ்ரயம் ஆச்ரயம் என பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது.  கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.


     

எனவே இதனை சமற்கிருத சொல் என்ற கருத்து  பொருந்தாது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியப்பா என்பது  ஒரு கருத்தை சுருங்கச்சொல்லுதல் என்ற பொருள்படும்படி பாவகை என வரையறுக்கப்படுகிறது.. தமிழ் இலக்கிய அகராதிகள்  ஆசிரியர் என்பதை  ஆசு + இரியர்  அதாவது   பிழைகளை நீக்குபவர் அல்லது குற்றம் களைபவர் என்று பொருளை சுட்டுகின்றன.

 

இதே அடிப்படையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதையும் பொருத்தி பார்க்கும்போது திருட்டுகொள்ளை  நடைபெறாமல் காத்து, பொதுப்பொருட்களுக்கு அரணாக இருத்தல் என்று எச்செயலிலும் வாக்கு தவறாமை, தவறு நடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு  என்று பொருள் கொள்ளலாம்.

 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆசிரியம் கல்வெட்டுகள்:

 

   மேலப்பனையூர் கிராமத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்  ஸ்வஸ்தி  ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப்பனையூர் குளமங்கலம் ஆசிரியம் ராயப்பர் என்பாரின் மகன் பாகுய நாயக்கர் என்பார் பனையூர் குலமங்கலத்ததை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கிறது இக்கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில் பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்ததாக கணிக்க முடிகிறது. இன்றளவும் பனையூர் கிராமத்தில் ஆசிரியம் குடும்பம் என்று குடும்பத்தினரை அழைக்கும் வழக்கம் இருப்பதை கள ஆய்வில் அறிந்துகொண்டோம்.

 

பொன்னமராவதி வட்டம், செவலூர் சேகரம் மலையடிப்பட்டி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு வட புறம் தனியார் தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றாலும் கடைசிப்பகுதியில் பொன்னமராபதிநாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம்அதாவது பொன்னமராவதி நாட்டின் வடப்பற்றான செவ்வலூர் ஏவ்விருத்தரையர்கள் எனும் குழுவினர் கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்ததை அறிவிக்கிறது. கல்வெட்டு கி.பி 16 நூற்றாண்டைச்சேர்ந்ததாக  கணிக்க முடிகிறது.

   

திருமயம் வட்டம் மல்லாங்குடி ஊராட்சிக்குட்பட்ட தேவர் மலை வடபுறம் உள்ள வயல்வெளியில் கடந்த 2016 ஆண்டு கரு.ராஜேந்திரன் அவர்களால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில்   ஸ்வஸ்தி ஸ்ரீதேவமலையில் நாயக்கர் நம்பி அகமறமாணிக்கர் ஆசிரியம்என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

     , தேவர்மலையின் இறையான நாயக்கர் நம்பிகளுக்கான கோவில்  நிர்வாக உரிமையை அகமறமாணிக்கர் என்பார் பெற்றிருந்ததை குறிக்கும் வகையில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் பொ.ஆ பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்தாக கணிக்க முடிகிறது.  என்றார்.


 

புதிய கல்வெட்டின் முக்கியத்துவம் குறித்து கரு.ராசேந்திரன் கூறியதாவது,        

     குடிமக்கள்  விவசாய விளை பொருட்கள் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கான பாதுகாப்பு ,  வணிக பொருட்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பு வழங்குபவர் பற்றிய அறிவிப்பு  , நீர்நிலைகளை ஒப்படைத்தையும்குளம்நீர் வரத்து வாய்க்கால்கள்கலிங்குகளை சீர் செய்தவருக்கும்நாட்டவர்களிடையே அமைதியை நிலை நாட்டியமைக்காகவும் மரியாதை செய்யும் பொருட்டும் ஊரணியை ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு விட்டுக்கொடுக்கவும்புரவரி வசூலித்தல் வணிகக்குழுக்களின் முகாம்களாக இருந்த இடங்களை அஞ்சினான் புகலிடமாக அறிவித்தல்தேவதான நிலங்களை காக்கும் பொறுப்புகோவிலுக்கு நெல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கான அறிவிப்புகுளத்தை பணி செய்து கொடுத்தவர் இன்னார் என்பதற்கான அறிவிப்புகோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய அறிவிப்பு  என ஒரு குறிப்பிட்ட நபரிடமோ அல்லது ஊரார்களிடமோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியம் கல்வெட்டுகள் ஊரின் மையத்திலோ அல்லது மக்கள் எளிதில் அணுகும் இடத்திலோ வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேற்சொன்ன கருத்துக்களை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூன்றும் ஊரையோ கோவிலையோ  நிர்வகிக்கும் பொறுப்பு வகிப்பவரை அறிவிக்கும் பொருட்டு நடப்பட்டுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

 

 

 

 

 

Saturday, June 13, 2020

மல்லங்குடி சிவன்கோவிலுக்கு திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தகுடி நகரத்தார் கல்வெட்டு


மல்லங்குடி சிவன்கோவின் கல்வெட்டு  
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில்             பலகைக்கல்லில் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளது. 
இரண்டே கால் அடிஉயரத்துடனும் ஒன்னே கால் அடி அகலத்துடனும் சாய்ந்த நிலையில் அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. கல்வெட்டின் மேல்புறத்தில் தோரணவாயில் காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பொறிக்கப்பட்டுள்ள  கல்வெட்டானது 14 வரிகளுடன் உள்ளது.

கல்வெட்டின் காலம் :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் கிராம ஊராட்சிக்குட் பட்ட மல்லங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் காலக்குறிப்புகள் ஏதுமில்லை என்பதால் எழுத்தமைதியின் அடிப்படையில் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.
கல்வெட்டுச் செய்தி :
இதில் “  சுபமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவுகந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குல சேகரபுரத்துக்குக் கழனிவாசலுடையான் திருக்கொடுங்குன்ற முடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம் சுபமஸ்து” என்று திருவோலக்க மண்டபம் அமைத்துக்கொடுக்கப்பட்ட செய்தியை பகிர்கிறது.

ஒரு பூவுகந்தருளிய நாயனார்:
ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளை காண முடியவில்லை அதுமட்டுமின்றி வழிபாட்டிலிருந்த எவ்வித சான்றுகளும் காணப்படவில்லை , என்றாலும் உமையாண்டி ஊரணி பிள்ளையார் என்ற சிற்பமும் , வேல்களும் இக்கல்வெட்டு காணப்படும் இடத்தில் உள்ளது.
திருவோலக்க மண்டபம் :
திருவோலக்க மண்டபம் குறித்து கூறும் திருவாசக (திருவா.21, 6) பாடல் வரிகள்   “ஏசா நிற்பர் என்னை உனக்கு , அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர் யான்தானும், பேணா நிற்பேன் நின்னருளே , தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோலக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.  என்கிறது
அதாவது திருவோலக்கம் என்ற பதம் இறைவனாரின் திருச்சபை என்ற பொருளுடன் வழங்கப்பட்டுள்ளது. இது    கொலு மண்டபம், தர்பார் என்று பரவலாக அறியப்பட்டாலும், முற்கால வழிபாட்டு மரபில்  அத்தாணியிருப்பு மற்றும்  திருவோலக்க மண்டபம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
  அதாவது இறைவனாரின்  திருவுருவம் பக்தர்களின்  வழிபாட்டிற்காக ,  வைக்கப்படும் மண்டபம் என்பதால் திருச்சபை எனப்படும் திருவோலக்க மண்டபம் என்றே வழங்கப்படிருப்பதை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. என்றாலும் இவ்விடத்தில் எவ்வித கட்டுமானங்களையும் காணமுடியவில்லை.
குலசேகரபுரம் எனும் இளையாத்தக்குடி நகரத்தார்களின் அறப்பணி 
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வணிகத்தை பிரதானமாகக்கொண்டவர்கள், இவர்கள் வணிகத்திற்காக பல நாடுகளிலும் , பல  ஊர்களிலும்  தங்களது வசிப்பிடங்களை மாற்றி வசித்து வந்தாலும் தங்களது ஊர்ப்பெயரோடு கூடிய பெருந்தெரு எனப்பெயரிட்டு  அழைத்து வந்துள்ளதையும், பல இடங்களில் கோயில் திருப்பணிகள், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகள்  செய்துள்ளதை  பல்வேறு கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
    மலையாலங்குடி ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்றழைக்கப்பட்ட சிவாலயத்தில் திருவோலக்க  (திருக்காட்சி) மண்டபத்தை குலசேகரபுரம் என்று அழைக்கப்பட்ட இளையாத்தக்குடி ஊரவரான கழனிவாசலுடையான் என்ற மூதாதையர் பெயரையும், திருக்கொடுங்குன்ற முடையான் என்ற வசிப்பிடத்தையும் பெயரோடு தாங்கிய ,  அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்பார் அமைத்துக்கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு கூறுகிறது. 
 இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஒருவரா ? அல்லது மூவரா என்ற ஒரு சிறு ஐயமும் எழுகிறது.  அது என்னவெனில் குலசேகரபுரத்து கழனிவாசலுடையான் ,திருக்கொடுங்குன்றமுடையான் திருச்சிற்றம்பலமுடையான் என வருவதால் தனித்தனி பெயராக இருக்கலாம் என்று இக்கட்டுரை ஆசிரியர் கருதுகிறார். எனினும் மூத்த கல்வெட்டு அறிஞர் சு.இராஜகோபால் அவர்கள்  இது ஒருவருடைய பெயரே என்றும் மேற்சொன்ன விளக்கத்தையும் கட்டுரை ஆசிரியருக்கு தந்துள்ளார்.
ஒன்பது சிவாலயங்கலும் நகரத்தாரும்  
இளையாத்தக்குடி, மாத்தூர் , வைரவன்கோயில் , நேமம், இலுப்பைக்குடி, ,சூரக்குடி,  வேலங்குடி , இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோவில்களை அடிப்படையாகக்கொண்டு ஒன்பது குழுக்களாக அறியப்படும் நகரத்தார்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, தங்கி வணிகம் செய்தாலும், தங்களை தங்களது ஊர் பெயர்களோடே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை பல்வேறு சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  
இவ்வகையில் தாம் இளையாத்தக்குடியிலிருந்த கழனிவாசல், திருக்கொடுங் குன்றம் எனும் பிரான்மலை , திருசிற்றம்பலம் ஆகிய தமது மூதாததையர் வாழ்ந்த ஊர்பெயர்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதற்கான  சான்றாக  இக்கல்வெட்டு அமைகிறது. 
இந்த கல்வெட்டு கண்டுபிடிப்பில் களப்பணியாற்றிய தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரெங்கன் ,உறுப்பினர் ம.மு.கண்ணன்  ஆகியோருக்கு நன்றி 
களப்பணியில் பங்கேற்று  உதவிய மல்லாங்குடியைச்சேர்ந்த  பெரியவர்கள் நடராஜன் ,சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் உதயகுமார், தினேஷ்குமார், ராகுல், பிச்சைமுத்து , சந்தோஷ் குமார் ,ரூபினி,  ஷாலினி ஆகியோருக்கும்
பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் 

கூடுதல் செய்தி : இந்த கல்வெட்டினை முழுமையாக வாசித்துவிட்டு அதிலுள்ள குறைகளை சுட்டி உதவிட தொல்லியல் அறிஞர் முனைவர்.சு.ராஜகோபால் அய்யாவிடம் கேட்டிருந்தோம் , அப்போது திருவோலக்க,  திருவேலுக்கு என்று வாசித்திருந்தேன். ஏனென்றால் துணை எழுத்து முழுமையாக இல்லை , அத்துடன் கோயிலில் இரும்பாலான வேல் கம்புகளும் அதிகமாக நடபட்டிருந்தது. மண்டபத்தின் அறிகுறிகளும் இல்லை என்பதால் இந்த வேல்களுக்கு ஒரு மண்டபம் அமைத்துக்கொடுத்திருக்க இயலுமோ என்று நினைத்திருந்த நிலையில் , துணை எழுத்து மறைந்திருக்கலாம் என்பதைக்கூறி தனது அனுபவ அறிவை எனக்கு தந்து உதவினார்கள். அய்யாவிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி 

எங்கள் தலைவர் அய்யா கரு.ராஜேந்திரன் அவர்களின் நகரத்தார் வரலாறு குறித்த தொடர் அனுபவப்பகிர்வும் இதற்கு பயனாக அமைந்தது.

கண்டுபிடிப்பு செய்தி பகிர்வு 
ஆ.மணிகண்டன் 
ஆய்வாளர் - தொல்லறிவியல் துறை 
நிறுவனர் - தொல்லியல் ஆய்வுக்கழகம் 
புதுக்கோட்டை 

kindly note the photograph from file

Thursday, December 14, 2017

சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் – ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் அருகே,  சிறுசுனை கிராமத்தில் பதிமூன்றாம்  நூற்றாண்டில் உள்ளூர்  நிர்வாகத்திடம்  வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுசுனை கிராமத்திலுள்ள சிதிலமடைந்த கோயிலில் கள ஆய்வு செய்ய வேண்டுமென எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்புமன்ற ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வுக்கழக மரபுநடை ஒருங்கிணைப்பாளருமான கஸ்தூரிரங்கன் மற்றும் பள்ளியின் மன்ற மாணவர்கள் அயன்ராஜ் , ஐஸ்வர்யா, நிகல்யா அளித்த தகவலையடுத்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகதலைவர்  கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் மூலம் புதிய வரலாற்று செய்தியை வெளிப்படுத்தியுள்ளோம்.

சிதைந்து போன சிறுசுனையூர்  ஆரண்ய விடங்கர் சிவன் கோவில்
கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ள இடத்தில்  13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன்கோவில்  சிதைந்த நிலையில்  கிடக்கிறது எனினும் இவ்விடத்தில் சிவன் கோவில் இருந்ததை உறுதி படுத்தும் விதமாக சிறுசுனையூர்  குளத்தின்  அருகே,    கி.பி 1243 ஆம் ஆண்டில்  விளக்கு எரிக்க பெரியபிள்ளை மருந்தாழ்வான் என்பவர் பக்கல் கொண்ட இருநூறு காசு கொடுத்த கல்வெட்டும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையின்  நாற்கல நெல் வழங்கிய செய்தியடங்கிய  கல்வெட்டும் கரு.ராஜேந்திரன் குழுவினரால் ஏற்கனவே கண்டுபிடித்து வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடத்தில்  சதுர ஆவுடை, பகுதியளவு சிதைந்த நந்தி, மயில்வாகனத்துடன் கூடிய முருகன் சிலை  உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  
இவை  கிராம மக்களால் பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளது. அதே சிதைவுகளிடையேதான்   இந்த புரவரி கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்த புரவரி உரிமை
அரசிறை எனப்படும் காணிக்கடன் நீக்கப்பட்ட ஊர்களில் அவ்வூரின் நன்செய் புன்செய் முதலிய நிலங்களின் விளைச்சல் வருவாய்க்கு ஏற்றவாறு உள்ளூர் நிர்வாகத்தணிக்கையின் அடிப்படையில், வசூலிக்கப்படும் வரியே  “புரவரி”யாக பெறப்பட்டுள்ளது. இதனை வசூலிக்கும் அதிகாரமும் தணிக்கை செய்யும் அதிகாரமும் பெற்ற அதிகாரி சீகரணத்தார் என அழைக்கப்பட்டுள்ளனர்.
சோழர் ஆட்சியில் இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரகடனப்படுத்தி , ஊர் குடிமக்களின்  நிர்வாகத்தலைமை  இடமாக விளங்கிய கோயிலில்  இந்த ஆசிரியம் கல்வெட்டு நடப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்தி
மங்கல வரியுடன் சிறுசுனையூரான விருதராஜ பயங்கர  சதுர்வேதி மங்கலம் புரவரி  சிகரணத்தார்  ஆசிரியம்என்பதாகும் , இக்கல்வெட்டிலுள்ள செய்தியின்  மூலம் சிறுசுனையூர் என்ற இவ்வூர் விருதராஜ பயங்கரன்  என்ற பெயருடன் விளங்கிய முதலாம்  குலோத்துங்கனின் பெயரால்  அழைக்கப்பட்டிருப்பதும், விருத ராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன்  சிறு ஊர்களின் தலைமை இடமாக விளங்கியிருப்பதும்,  இவ்வூரின்  “புரவரியை”  “சிகரணத்தார்”  என்று அக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த  கிராம நிர்வாக அதிகாரியே   வசூலித்து கொள்ள   உரிமை  வழங்கியிருப்பதை ஊர்  குடிமக்களுக்கு அறிவிக்கவே  இந்த ஆசிரியம் கல்வெட்டு  நடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின்மூலம் மூலம் சோழர்கால  மன்னராட்சி நிர்வாகத்திலேயே  வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்த கிராமங்களின் உள்ளூர்த்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்திருப்பது நமக்கு வியப்பளிக்கும் தகவலாக உள்ளது.







 


Thursday, August 25, 2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படும் முறையை வெளிப்படுத்தும் அரிய சான்றுகள் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வரைவு செங்கோடுகள் மற்றும் வரைவு எழுத்துகள் அடங்கிய அரிய சான்றுகள் கந்தர்வகோட்டை ஒன்றியம் நொடியூர் சிவன் கோயில் குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலை கடம்பர் கோயில் புதுக்கோட்டை வட்டம் திருவிடையாப்பட்டி சிவன் கோவில்களில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் மேலப்பனையூர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் மங்கனூர் மணிகண்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான மணிகண்டன் கூறியதாவது,
வரலாற்று ஆவணங்கள்
உலகின் பாரம்பரிய வரலாற்று உண்மைகளை தற்கால மக்கள் அறியும் வகையில் குகைகளில் வரையப்பட்ட செங்கோட்டு ஓவியங்களும்,  ஓலைச்சுவடிகளும் , களிமண் உருவங்களும் , பானைகளில் கீறப்பட்ட முற்கால எழுத்துருக்களும் , செப்பேடுகளும் ,  புடைப்பு சிற்பங்களும் சான்றுகளாக அமைந்துள்ளன.  இதன் பிற்கால வளர்ச்சியாக இரண்டாயிரம் ஆண்டுகளில் அசோகர் கால கல்வெட்டு முதல் தமிழகத்தின் பழமையான விழுப்புரம் ஜம்பை, புதுகோட்டை பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் வரை தன்னகத்தே பல்வேறு செய்திகளை தாங்கி நிற்கின்றன.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்று உண்மைகளை நமக்கு தெரியப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருந்துவருகிறது மொழியானது எழுத்து வடிவம் பெற்று சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பழங்கால கல்வெட்டு எழுதும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் கல்வெட்டின் காலம் , கல்வெட்டு எந்த ஊரில் என்ன காரணத்திற்காக பொறிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும் அத்துடன் கல்வெட்டில் யாரால் பொறிக்கப்பட்டது என்கிற விவரங்களும் அடங்கியிருக்கும்.

கல்வெட்டு குறித்த அரிய சான்று

கல்வெட்டுகள் எவ்வாறு ஒரே வரி வடிவில் பொறிக்கப்பட்டன என்பதற்குரிய சான்றுகள் இதுவரை எந்த கல்வெட்டுக்களிலோ பழங்கால ஆவணங்களிலோ தெரிவிக்கப்படாத நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வரைவு செங்கோட்டு எழுத்துகள் அடங்கிய அரிய சான்றுகள் கந்தர்வகோட்டை ஒன்றியம் நொடியூர் சிவன் கோயில் , குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலை கடம்பர் கோயில் , புதுக்கோட்டை வட்டம் திருவிடையாப்பட்டி சிவன் கோவில்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு எழுதிய முறை

கோயில் உள்ளிட்ட பொதுவான இடங்களிலேயே கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன .  குறிப்பாக கல்வெட்டு பொறிக்கப்பட வேண்டிய கற்களை , கட்டுமானத்தில் நிர்மாணித்த பிறகே , தாம் சொல்லவந்த செய்தியை கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர். இதில் ஒரே கோயிலில் , வெவ்வேறு மன்னர்களின் கல்வெட்டுகளை காண முடிகிறது .

நொடியூரில் அதிட்டானம் வரை மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டும் ,  பித்தி எனும் சுவர் பகுதிகளில் மாறவர்மன் குலசேகரத்தேவன் கல்வெட்டுகளோடு கோயிலின் கருவறையின் பின்புற சுவரின் மேற்பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்படுதுவதற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகளுடன் காவி கொண்டு மயிரிழை அளவில் நீள்வாக்கிலான 5 சென்டிமீட்டர் இடைவெளிகளுடன் கூடிய நெடுக்கு கோடுகளும் ,  மேலிருந்து கீழாக 5.5 சென்டிமீட்டர் இடைவெளிகளுடன் கூடிய  குறுக்கு கோடுகளும் , வரையப்பட்டுள்ளன .  அதனுள் உள்ள நீள் சதுர கட்டங்களில் காவி கொண்டு செங்கோட்டு எழுத்துக்களை முன்வரைவு செய்துள்ளதையும் ,
 அதே போன்று நார்த்தாமலை கடம்பர் கோயில் , திருவிடையாப்பட்டி சிவன் கோயில்களில் குறுக்கு கோடுகள் மட்டும் போடப்பட்டு அதனுள் கல்வெட்டு பொறிக்கப்பட வேண்டிய முன் வரைவு எழுத்துகள் காவி (பெரஸ் ஆக்சைடு) கொண்டு எழுதப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளோம் . இதன் மீது உளி கொண்டு எழுத்துக்களை பொறிக்கும் பணி நடப்பது போர் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் தடைப்பட்டிருக்க வேண்டும் .  
இதனால் சுமார் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  முன்வரைவு செய்யப்பட்டு இதுநாள் வரை பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் , ஆங்காங்கே அழிந்து மறைந்த நிலையில் இருந்தாலும் , மிகநுட்பான காவிக்கோடுகள் உள்ளிட்டவைகளுடன்,  தெளிவாக கிடைத்துள்ளது . காவி கொண்டு எழுதப்பட்ட இந்த எழுத்துருக்கள் கல்வெட்டியல் வரலாற்றின் கல்வெட்டு எழுதப்பட்ட முறைக்கு மிக அரிய ஆவணமாக உள்ளதோடு  பல்வேறு தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...