Showing posts with label பூலாங்குறிச்சி. Show all posts
Showing posts with label பூலாங்குறிச்சி. Show all posts

Sunday, September 5, 2021

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி

     
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்த நிலையில் கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாளைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு  அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம் , தற்போது புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே பாதுக்கக்கப்பட்ட சின்னமாக அறிவித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.


கல்வெட்டின் சிறப்பு     

   

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22
வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக்கொண்டது.


           தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்திருப்பதற்கு ஒட்டு மொத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் .

 

நன்றியுடன்

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்

 

Friday, May 31, 2019

பூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின்  உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் சீ.அ.மணிகண்டன், ஆசிரியர் சோலச்சி திருப்பதி ஆகியோருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் இப்பகுதி பழங்கால வனச்சூழல் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு உயிரினப்பரவலை கொண்ட பகுதியாக இருக்கிறது.
இதே போன்ற சூழல் மாவட்டம் முழுவதும் ஒரு காலத்தில் இருந்திருப்பதை புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் தெளிவாக நமக்கு வெளிப்படுத்துகிறது.
சரி விசயத்துக்கு வருவோம் ,
 ஆய்வின் மூலம் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளதை காண முடிந்தது.
அமைவிடம் :
மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச்சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது.  முக்கிய வழிபாட்டு பகுதியிலிருந்த கல்வட்டத்திலிருந்த கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேரெதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும்  இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது.கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இவைகள் ஐந்தும் வழிபாட்டில் இல்லை 
கோவில் கட்டுமானத்திற்கு முந்தைய வழிபாட்டுத்தலம் :
 இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப்போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளது, ஆனால் நெடுங்கல் வழிபாடு , கல் திட்டை வழிபாடு, உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோவிலில் மட்டும் கல் வட்டம் , கல் திட்டை வழிபாட்டிலுள்ள நிகழ்கால சான்றாக உள்ளது சிறப்பானது.


கல்பதுக்கை குறித்த இலக்கிய பார்வை :

நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் , கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை ’’ என்று அகநானூறு பாடல் எண் 231 லும், ‘‘வெந்நுனை அம்பின் விசையிட வீழ்ந்தோர் , எண்ணுவரம் பறிய உவலிடு பதுக்கைச் சுரங்கெழு கவலை’’ என்று பாடல் எண் 109 லும் பாடற் பகுதிகள் இப்பதுக்கைகளைப் பற்றி அறிவிக்கின்றன.

‘‘தாம் வசித்த கற்களைவிட்டுத் தெய்வங்கள் நீங்கி விட்டமையால் அம்பலங்கள் பாழடைந்து கிடக்கின்றன’’ என்கிறது புறநானூறு 52 வது பாடல், பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலை என்கிறது ஐங்குறு நூறு , இவ்வாறு சங்க காலம் வரை இந்த பெருங்கற்கால பண்பாடு நீடித்து நிலைத்து இருந்ததை இந்த இலக்கிய சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது. கல் பதுக்கைகளில் வைக்கப்படுபவர்கள் வீரத்தினாலும் , தனது தலைமைப்பண்பாலும் உயர் நிலையில் இருந்தோருக்கு செய்யப்படும் மரியாதையாக இந்த பெருங்கற்கால சின்னங்கள் இருந்துள்ளதையும் அதுவே பின்னாளில் வழிபாட்டு முறையானதையும்  உணர முடிகிறது.
கல்வட்டங்களின் வடிவம் 

ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத்தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டுள்ளன.
கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்பு பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக்கற்களை இணைத்து சதுரவடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஒரு சில இடங்களில் செம்புராங்கற்களுக்கு பதிலாக கல் வட்டங்களை அமைக்க இப்பகுதியில் எளிதாக கிடைக்கும் கருங்கல் பலகைக் கற்களை பயன்படுத்தி யுள்ளனர்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவைகளில் கோயிலின் வடபுறம் உள்ள கல் வட்டமே 24 அடி விட்டமுடையதாகும் இதே அளவை ஒத்த கல்வட்டங்கள் இரண்டும் .ஏனைய நான்கும் 14 அடி விட்டமுடைய கல்வட்டங்களாக உள்ளன. கல்லறையின் மேற்பகுதி மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் 3 அடி வரை உள்ளது. இது கல்வட்டத்திலுள்ள செம்புறாங்ககற்களை விடவும் சற்று கூடுதல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. 


இதனை கல்திட்டை போன்ற கற்பதுக்கைகள் என வரலாற்று ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். கல் வட்டத்தின் உட்பகுதிகளில் சிறிய கற்கள் குவியலாக நிரப்பப்பட்டுள்ளது. சில கல் வட்டங்கள் கல் நிரப்பப்படாமல் உள்ளது.




வழிபடும் முத்தரையர்கள் :

இந்த கல் வட்டங்கள் ஒட்டைப்பிச்சான் வகையறா எனப்படும் முத்தரையர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை வழிபடுபவர்களாக அதே இனத்தைச் சேர்ந்த குப்பை கொட்டியான் வகையறா மற்றும்  சிவகங்கை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் பல நூறு ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மொக்காண்டி என்பவர் இந்த குறிப்பிட்ட மக்களின் மூதாதையராக இருக்க வாய்ப்பு உள்ளது. 
தொல் மரபணு ஆய்வு :
இத்தகைய தகவல்களை அறிவியல் முறைப்படி உறுதி செய்திட இப்பகுதியில் இருக்கும் கல்வட்டங்களை தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்து கிடைக்கும் கரிம சான்றுகள் , மரபணு கூறுகள் ஆகியவற்றை ஆய்வுகுட்படுத்துவதன் மூலம் , இலக்கியங்களில் சொல்லப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையையும், வழிபடுபவர்களுடைய பண்பாட்டு தொடர்பையும் உலகறியச்செய்ய முடியும். 

கல்வட்டங்களின் காலம் :
உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் மெகாலித்திக் காலத்தில் ஆப்பிரிக்கா , ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனை பெருங்கற்கால பண்பாடு என தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர். குறிப்பாக கல்வட்டம், கல் திட்டை, கல் பதுக்கை , நெடுங்கல் , கற்குவை உள்ளிட்ட அமைப்புகள் பரவலாக காணப்படுகின்றன. 


இந்த அமைப்புகளில் புதைக்கப்படுபவர்கள் பெரும்பாலும்  முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் ,  வீரர்கள் , வேட்டை, களவு மீட்டல் , போர் உள்ளிட்ட புறத்திணை காரணங்களால் இறந்தவர்களாகவே கருத்தப்பட்டு அவர்களின்  நினைவாக பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டமையால் பெருங்கற்கால சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
 இது இரும்பு உளி உள்ளிட்டகருவிகளின் துணையோடு பாறைகளை உடைத்து பயன்படுத்தியமையால் இது இரும்புக்காலத்தில் இருந்த மற்றொரு பண்பாடு என்றும் நோக்கப்படுகிறது .

 உலக அளவில் பெருங்கற்கால சின்னங்களின் காலம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலுள்ள கல் வட்டங்களின் வயது கி.மு 2500 லிருந்து 1500 வரையிலும் இது வடகிழக்கு பிரான்ஸ் பகுதியில் கி.மு 5000 எனவும், கணிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் நடந்த ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆய்வு முடிவுகளின் படி கி.மு 540 லிருந்து காலக்கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இவைகளில் எழுத்து பொறிப்புகளுடன் கிடைத்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுத்துவடிவம் இருந்துள்ளதை இந்த அகழ்வாய்வு வெளிப்படுத்தியது.
இந்தியாவில் இரும்புக்காலம் என்பது கி.மு 1100 லிருந்து கி.மு 350 என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் கே.பி.ராவ் தலைமையில் நடந்த அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி , மட்பாண்டங்கள் உள்ளிட்டவற்றை காலக்கணிப்பு செய்தததில் கிடைத்த முடிவுகளின் படி இரும்புக்காலம் கி.மு. 2400 முதல் அதாவது  இன்றிலிருந்து 3400 வருடங்களுக்கு முன்னதாக தொடங்குவதாக ஆய்வு முடிவு  வெளிவந்துள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி , ராஜகுளத்தூர் , செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள் , கல் பதுக்கைகள் , கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி  தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம்

ஊடகங்களில் கல் வட்டம் 
https://timesofindia.indiatimes.com

https://www.deccanchronicle.com/nation/current-affairs

https://www.nakkheeran.in/special-articles

https://www.dinamani.com/tamilnadu

http://www.dinakaran.com/News

https://makkalkural.net/news












தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...