Showing posts with label முத்தரையன். Show all posts
Showing posts with label முத்தரையன். Show all posts

Saturday, September 2, 2017

கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டிபட்டியில் இராசராசனின் முப்பாட்டனான பராந்தக சோழர் காலத்தைய கற்றளிக்கோவில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள

வீமன்குளத்தின் கரையில் சில மாதங்களுக்கு முன்பு நீர்வரத்து  பாலம் அமைக்கும் 

பணி நடந்துள்ளது. அப்போது சில முழு உருவ கற்சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. 

இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழகத்திற்கு மங்கனூர் பிரதீப் , நண்டம்பட்டி ஸ்டாலின் ஆகியோர்  தகவல் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் இராசேந்தின், நிறுவனர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உறுப்பினர் பூங்குடி ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான கற்சிற்பங்களும் ,பராந்தகசோழன் ஆட்சியைக்குறிக்கும் கல்வெட்டும், கற்றளிக்கோவிலின் கற்கலசமும், ஆவுடையும் அடையாளம் காணப்பட்டது. மேலும் இதேபகுதியின் சற்று அருகில் சமணதீர்த்தங்கரர் கற்சிற்பமும் கண்பிடிக்கப்பட்டுள்ளது.


கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடம்


புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி  புதுக்கோட்டை மாவட்டம் செங்களூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி  தஞ்சாவூர் மாவட்டம்  புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் குடுக்கன் தரிசு என்ற இடத்தில் ஏராளமான இடைக்காலத்தைய பானை ஓடுகள் விரவி கிடக்கின்றன. இதே பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே கட்டுமானக்குவியல்களும், செங்கற்களும் காணமுடிகிறது.

கற்றளி கோயில்


அடித்தளம் முதல் கலசம் வரை முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளிக்கோவில் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. இது முற்கால சோழர் கலைப்பாணியில் கோயில் கட்டுமான மரபுகளை பின்பற்றி கட்டப்பட்டிருப்பதை புதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட விமான கற்கலசம் , தூண்கள், மற்றும்  தூண்களை தாங்கிப்பிடிக்கும் வகையில் அடித்தளமாக அமைக்கப்பட்ட இரண்டு அடி உயரமுள்ள வட்டவடிவிலான உருளைக்கற்கள் , கோவிலின் விமானத்தின் புறச்சுவர் விளிம்புகளில் அமைக்கப்பட்ட குரங்கு மற்றும் தேவகணங்களின் உடைந்த தலைப்பகுதிகள் ஆகியவற்றின்  மூலம் இவ்விடத்தில் ஒரு முழுமையான கற்றளிக்கோவில் இருந்துள்ளதை உறுதிபடுத்த முடிகிறது




கற்றளியின் காலம்


கட்டுமானப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆதாரமாகக்கொண்டு மதிரை கொண்ட கோப்பரகேசரியான பராந்தகன் ஆட்சி செய்த கி.பி 907 முதல் 950 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பியிருக்கக்கூடும் என அனுமானிக்க முடிந்தாலும் இங்கே காணப்படும் சிற்பங்கள் குறிப்பாக முருகன் , கௌமாரி உள்ளிட்ட சிற்பங்கள் காலத்தால் முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. எனில் இக்கற்றளி இதற்கு முன்பே கட்டமைக்கப்பட்டு அதன் பிறகு கட்டுமானங்களை நீட்டிருத்திருக்கவும் வாய்ப்புள்ளது.



அடையாளம் காணப்பட்ட கற்சிற்பங்களும் காலமும்



தமிழர்களின் தாய்வழிச்சமூகத்தின் அடையாளமான முற்கால சோழர் கலைப்பாணியிலான தவ்வை,மாந்தன் , மாந்தி சிற்பம் , அமர்ந்த நிலையில் பல்லவர் கலைப்பாணியிலான  முருகன் சிற்பங்கள் இரண்டும்,சப்த கன்னியரில் ஒருவரான கௌமாரி சிற்பமும்,முற்கால சோழர் கலைப்பாணியில் உமையாளை மடியமர்த்திய நிலையில் சிவனார் சிற்பம் ஒன்றும், தரையில் கையூன்றிய நிலையில் தேவியாரை சாந்தமாக்கும் தம்பதி சகிதமான சிவனார் சிற்பமும், கையில் வில்தாங்கிய நிலையில் பிச்சாடனார் சிற்பமும், மிக நேர்த்தியான வடிவில் பிரம்மா சிற்பமும், முகம் சிதைந்த சண்டிகேசுவரர் சிற்பமும், உடல் இல்லாத நிலையில் இடுப்பிலிருந்து பாதம் வரை காணப்படும் பைரவர் சிற்பமும், மிக நேர்த்தியான அய்யனார் சிற்பமும், நின்ற நிலையில் பார்வதியார் சிற்பமும், நான்கு அடி நீளம் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு நந்தி சிற்பங்களும், தாமரை இதழ் வடிவில் அமைக்கப்பட்ட ஆவுடையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மண்ணில் புதைந்த நிலையில் முட்புதர்களுக்குள்ளாக ஏராளமான சிற்பங்கள் இருப்பதை அனுமானிக்க முடிகிறது.


சமண தீர்த்தங்கரர் சிற்பம்


தியான கோலத்தில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள முக்குடை அமைப்புடன் கூடிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் இக்கோவில் கட்டுமானங்கள்  கண்டறியப்பட்டுள்ள பகுதிக்கும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலேயே சமணப்பள்ளி இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் சமணமும் சைவமும் பரவி இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.



இராசராசனின் முப்பாட்டன் பராந்தக சோழன் கல்வெட்டு


கோயில் கட்டுமானப்பகுதிக்கு மிக அருகில் உள்ள வயல்வெளியில் காணப்படும் கல்வெட்டில் மங்கல வரியுடன்


“மதிரைகொண்ட கோப்பரகே(சரி) ..... மியானலூர்ளக்ய மல்ல முத்தரையனினு....” என்ற செய்தியடங்கிய துண்டு கல்வெட்டு கிடைத்திருப்பதன் மூலம் இராசராசனின் முப்பாட்டனான மதிரைகொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயருடன்  வழங்கப்பட்ட பராந்தக சோழன் காலத்தில் மியானலூர்ளக்ய மல்ல முத்தரையன் என்பவர் இக்கற்றளியை எழுப்பிருக்கக்கூடும் அல்லது இக்கோவிலை புனரமைத்திருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.



இந்தக்கள ஆய்வில் மங்கனூர் சுதிவர்மன் , கிள்ளுக்கோட்டை லெட்சுமணன்.  நண்டம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள்  சூரியமூர்த்தி, ரஜினி, ஜான், வடிவேல்,பிரேம்குமார், டேவிட், ஜெயசீலன்,வடிவேல் கௌதம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.









Wednesday, April 5, 2017

1100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழிக்க குமிழி அமைத்துக்கொடுத்த தமிழன் – நொடியூர் மருதன் ஏரியில் கல்வெட்டு கண்டுபிடிப்பு




புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தலைவர் ராஜேந்திரன்,  நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர் கு.சோமசுந்தரம் , கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாலமுருகன்,சுதிவர்மன்,ஹரிகர சுதன்,சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா,  நாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது

கீழ் செங்கிளி நாடும் வளமும்
நொடியூர் பட்டிணம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் கீழ் செங்கிளி நாடு என்ற துணை நிர்வாக மண்டலமாக  17 ஆம் நூற்றாண்டு வரை செழிப்போடு விளங்கியுள்ளதை நொடியூரில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அக்கல்வெட்டுகளில் நீர் பாசனம், கோயில் பராமரிப்புக்காக வரி செலுத்துதல்,சுங்க வரி வசூலித்தல், இங்கு அமைந்திருந்த திருஞான சம்பந்தர் மட பராமரிப்பு  உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கின்றன.
 அது மட்டுமின்றி தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பின் மூலம் சோழர் ஆட்சிக்காலத்தில் இந்த ஆட்சிப்பகுதி மிக முக்கிய பகுதியாக விளங்கியதை அறியலாம்

புதிய கல்வெட்டுச்செய்தியும்  ஆண்டும் 
“ஷஸ்வத்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மர்க்குயாண்டு (பத்தா)வது கீழ்செங்கிளி நாட்டு மங்கலத்து. விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன் சேவித்த குமிழி “
கோவி ராஜகேசரி என்றழைக்கப்பட்ட ஆதித்தனின் பத்தாவது ஆட்சியாண்டில் கீழ்செங்கிளி நாட்டை சேர்ந்த மங்கலத்து விலக்க ஏரன் இரண சிங்க முத்தரையன் என்பவர் இந்த குமிழியை அமைத்து கொடுத்ததாக இக்கல்வெட்டில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 இக்கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதித்த சோழரின் கல்வெட்டு களோடு ஒப்புநோக்கும் போது  இது 1100 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது .

நொடியூர் மருதனேரி பெயரும் நிலவகைப்பாட்டு  தொடர்பும்
கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட மருதனேரியானது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு காடுகளை அழித்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால்தான் மருதநிலம் என்கிற வகைப்பாட்டில் வயலும் வயலைச்சேர்ந்த இடமாகவும் அமைந்துள்ளது. என்பதால் இது முழுக்க பாசனத்திற்கான ஏரியாக அப்போதே வகைபிரித்து நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது

குமிழி அமைத்தலும்  ஏரியும் :

ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேரும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய குமிழிகளும்  அன்றே இருந்தன.
தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. அதனைக் கொண்டுதான் வருடம் முழுவதற்குமான நீர்த்தேவையைச் சமாளித்துக் கொள்ளவேண்டும் என்பதை  நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி/குளங்களை உருவாக்கி, அந்த இரண்டு மாத மழை நீரையும் முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்திக் கொண்டனர். அவற்றிற்கு சான்றாக இருப்பத்துதான் இந்த மருதன் ஏரிக்குமிழியாகும்.

ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும்

ஸ்ரீ கோவி ராஜகேசரி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்களான ஆதித்தன் , கண்டராதித்தன் , இராஜராஜன் ஆகியோரில் ஆதித்தன் பல்லவர் களான நிருபத்துங்கன் , மகன்  அபராசிதன் , பாட்டன் பிருதிவீபதி யுடன் போர் உறவுகொண்டு  பாண்டியன் இரண்டாம் வரகுணன் என்பானை திருப்புறம்பியம்(கும்பகோணம் அருகே) எனுமிடத்தில் தோற்கடித்ததாக சான்றுகள் பகிரப்படும் நிலையில்,  இப்போரில் பிருதிவீபதி இறந்த போதும் பல்லவர்களுக்கு வெற்றிகிடைக்க ஆதித்தன் காரணமாக அமைந்தான். இதன் பின்னர் கி.பி.882 ல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை  விரிவாக்கம்  செய்ததோடு அதே காலக்கட்டத்தில் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான  முத்தரையர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டதை இரண சிங்க முத்தரையன் இந்த ஏரியை உருவாக்கி குமிழி அமைத்திருக்கும் இக்கல்வெட்டு   முத்தரையர் மற்றும் ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக அமைகிறது.

ஏரன் விலக்கன் இரணசிங்க முத்தரையன் யார்?

பெரம்பலூர் மாவட்டம்,உடையார் பாளையம் வட்டம்,செட்டித் திருக்கோணம் இரணேஸ்வரர் கோயிலின் கருவறை
முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில்
கங்கை நாடாழ்வாந் சேதநன் பட...கக்கு வைசத பகை திருந்த வேண்டுமென்று எல்லாரு சொல்ல சம்மதித்து திருக்குற்றத்து மாதேவர் “இரணசிங்க ஈஸ்வரமுடையாருக்கு” விளக்கு முப்பத்திரண்டும் சீராளந் துறந்த என்று செய்தி பகிரப்படுவதன் மூலம் இப்பெயர் கொண்ட ஆட்சியாளர் ஒருவர் இருந்திருப்பதும் அவரது இயற்பெயரான இரணசிங்கன் என்ற அடைமொழியுடன்  இறைவன் அழைக்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம் அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது .  இப்பெயருடன்   ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம்  அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்டு அப்பணியை செய்கிறவன் , அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம். விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும்   மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர்  வழிவகுக்கும் என நம்பமுடிகிறது என்பதோடு .
இந்தக்குமிழிகல்வெட்டு பழங்கால பாசன முறைக்கு சான்றாக அமைந்திருப்பதாகவும் கந்தர்வகோட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மூத்தக்கல்வெட்டு என்றும் கூறினார்.

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...