Showing posts with label புதுக்கோட்டை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை. Show all posts

Sunday, September 5, 2021

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கண்ணனூரில் உள்ள ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் அரசுக்குக் கோரிக்கை


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு வனப்பகுதியில், புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழித்தடத்தில் பனையப்பட்டியிலிருந்து ராங்கியம் சாலையில் சுமார் நான்கு  கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள கண்ணனூர் வனப்பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்குவியல், குத்துக்கல் ஆகியன  உள்ளன. இந்த கற்கால பண்பாட்டு சின்னங்கள் கற்பாறைகளைக் கொண்டு வட்ட வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அதன் மையத்தில் நெடுங்கற்கள் செங்குத்தாக நட்டு வைக்கப் பட்டுள்ளன. அவை மிகச் சமீப காலங்களில் வனத்துறையினரால் இயந்திர வண்டிகளைக் கொண்டு யூகாலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்காக அழிக்கப் பட்டுள்ளதை அறிந்து அவ்விடத்தை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன் ,  மங்கனூர் ஆ.மணிகண்டன் , உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , மஸ்தான் பகுருதீன் ஆகியோர் உறுதிசெய்தனர்.
இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராசேந்திரன் கூறுகையில் மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. நமது முன்னோர்கள் பெருங்கற்காலத்திலிருந்து வரலாறுகளை பாறை ஓவியங்கள் , பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், தாழிகள் என பல்வேறு வகையில் பதிவு செய்து வந்திருக்கிறார்கள். அந்தவகையில்  கண்ணனூரில் உள்ளவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் , கற்குவியல் வகையை சேர்ந்த நீத்தார் புதையிடமாக உள்ளது. இதன் காலம்  சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் வரை காலக்கணிப்பை கொண்ட வரலாற்று சின்னமாகும்.
இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைக்கும்போது புதைத்து விட்டு அதன் மேல் வட்ட வடிவத்தில் கற்குவியலை  அமைத்து அதன் மையத்தில் மென்கிர் எனப்படும் குத்துக்கல் அல்லது நெடுங்கல் நட்டு வைத்திருக்கிறார்கள் இது சுமார் பத்து அடி உயரத்துடன் உள்ளது. இவ்வாறு அமைப்பது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டதாகும். இந்தப் பண்பாடும் பழக்கமும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன் 500-ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் சங்ககாலம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
  வருங்காலச் சந்ததியினருக்கு பழங்கால வரலாற்றை சொல்லக் கூடிய இந்தச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இதன் முக்கியத்துவம்  தெரியாமல் வனத்துறையினர் தைலமரக் கன்றுகளை வளர்ப்பதற்காக இயந்திர வண்டிகளைக் கொண்டு இந்த வரலாற்றுச் சின்னங்களை அழித்திருக்கிறார்கள். இந்தப் பகுதிக்குள் டிராக்டர்களைக் கொண்டு உழுவதே தவறு. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்களைக் கொண்டு பெருங்கற்காலப் பண்பாட்டு நினைவுச் சின்னங்களை உடைத்தும் கற்களைப் பிடுங்கிப் போட்டும் அழித்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக நெடுங்கற்கள் கொண்ட இதைப் போன்றதொரு பெருங்கற்கால வரலாற்றுச் சின்னம் வேறெங்கும் இல்லை. சென்னை  மன்னர்கள் காலத்தில் பல இடங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகள் அறிவிக்கப் படாமல் விடுபட்டுள்ளது. இதனைப் பாதுகாக்காமல் விட்டால் வருங்காலச் சந்ததியினர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இயலாமல்  போய் விடும். இத்தகைய நினைவுச் சின்னங்கள் மேலும் வனத்துறையினரால் அழிக்கப்படாமல் இருக்கும் வகையில் வனத்துறையினரிடமிருந்து திரும்பப் பெற்று பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை முள்வேலி அமைத்து  இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப் பட்ட பகுதியாக உடனடியாக அறிவித்து இருக்கும் சின்னங்களை சிதையாமல் பாதுகாக்கப் படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.
மேலும் தொல்லறிவியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகமான பாதுகாக்கப்பட்ட தொல்லிடங்களையும் மரபு சின்னங்களையும்  கொண்ட மாவட்டமாகும் ,சென்னை தொல்லியல் வட்டத்தின் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் இம்மவட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கண்ணனூர் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளும் ஏராளமாக உள்ளன.  எனவேதான் இந்திய அரசின் தொல்லியல் துறை புதுக்கோட்டையை மையமாக வைத்து புதிய தொல்லியல் வட்டத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும் என கோரி வருகிறோம் என்றார்.


தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி

     
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்த நிலையில் கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாளைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு  அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம் , தற்போது புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே பாதுக்கக்கப்பட்ட சின்னமாக அறிவித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.


கல்வெட்டின் சிறப்பு     

   

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22
வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக்கொண்டது.


           தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்திருப்பதற்கு ஒட்டு மொத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் .

 

நன்றியுடன்

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்

 

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர் பாசன பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த பொற்கொல்லர் புதுக்கோட்டை மேலூர் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிப்பு



         புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார். இதில் தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

 தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழிக்கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

              பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்,திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

 குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராசேந்திரன் அவர்களால் கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

        இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

 

குமிழிக்கல்வெட்டுகள்

 புதுக்கோட்டையின் கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழி கல்வெட்டு காணப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் நொடியூரில் உள்ள கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த முதலாம் ஆதித்தன் சோழன் ஆட்சிக்காலத்தில் மங்கல நல்லூர் என்றழைக்கப்பட்ட தற்போதைய மங்கனூரைச்சேர்ந்த இரணசிங்க முத்தரையன் என்பவர் மருதனேரிக்கு குமிழி அமைத்துகொடுத்த கல்வெட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளோம்.

 கம்மாளர்களின் சிறப்பு

பழங்கால அறிவியல் , எண்கணிதம், வானியல் நகர்வுகள் அடிப்படையில் நன்கு தேர்ந்த கட்டுமான அறிவை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். செப்பு , இரும்பு , தங்கம், மரம் , கல் என ஐந்து தொழில்நுட்பத்திலும் திறம்பட இயங்கிய கன்னார் , கொல்லர், தட்டார், தச்சர், கற்தச்சர் என  ஐந்தொழிலை அடிப்படையாக கொண்டவர்களாக சங்க. இலக்கியங்களிலும் பழங்கால சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது.

பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான. பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்று அழைக்கப்படுகின்றனர்.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குண்டூர் பெருங்குளத்தில் முதலாம் ஆதித்த சோழன் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குண்டூர் பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவர் குமிழி அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 தட்டான் என அழைக்கப்படுவோர் சோழர் காலத்தில் பொன்னிலும் வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண்கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்திற்கான தட்டார்கள் பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சான்றாக திருவையாற்றில் உள்ள முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டு உலகமகாதேவி ஈசுவரம் கோயில் பணிக்கெனச் சக்கடி சமுதையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டான் அதாவது செம்பியன் மாதேவியருக்கான ஆபரணங்கள் செய்வதை தனிப்பணியாகக் கொண்டவருக்கு தட்டாரக்காணி வழங்கப்பட்டதையும். திரிபுவனியில் உள்ள முதலாம் இராசாதிராசனின் கல்வெட்டு தட்டாரக் காணியாக இரண்டு வேலி நிலத்தினை அரங்கன் கோமாரனான இராசராசப் பெருந்தட்டான் என்பவருக்கு வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

 

மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார் பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு  தெரிவிக்கிறது.

 மேலூர் பெருமடைக்கால் புதிய கல்வெட்டு

 புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மேலி(ழி)க்கண்மாயின் பெரிய குழுமிக்கருப்பர் கொம்படி ஆலயத்தின் அருகேயுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்" அதாவது

சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய  கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கணிக்கலாம். இந்தக்கல்வெட்டின் மூலமாக பொதுமக்களும் தொழில் புரிவோரும் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் பயிர்த்தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    




தமிழகத்தில்  சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன         கட்டமைப்புகளை    ஏற்படுத்துவதிலும்  சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும் என்றார்.

   மேலும் இக்கல்வெட்டு வாசிப்பை உறுதி செய்த மூத்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.ராஜகோபால் ,  படியெடுக்கும் போது உதவி புரிந்த முருக பிரசாத் ,ராகுல் பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோருக்கு  நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

Wednesday, May 22, 2019

பொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ தொலைவில் அமைந்துள்ளது


  பொற்பனைக்கோட்டையின் அமைப்பு




வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது, கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

  பொற்பனைக்கோட்டை சங்க கால கோட்டைகளுக்கான நிகழ்காலச் சான்று
சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட மாடமாளிகைகளும் கோட்டை கொத்தளங்களும் முழுவதும் அழிந்துவிட்டதாக கடந்த பத்தாண்டுகள் வரை அனைத்து ஆய்வாளர்களும் நம்பி வந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்றளவும் கோட்டைச்சுவர் அழியாமலும் , அதில் பயன்படுத்தப்பட்ட களிமண் சங்ககால செங்கல் கட்டுமானம் கோட்டைச்சுவரின் நான்கு அடி அகலமுள்ள சுற்று சுவர் மற்றும் கோட்டை கொத்தளத்தின் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமலும் உள்ளது. மேலும் கோட்டையைச் சுற்றிலும் சுமார் 15 ஆழமான, சுமார் 40 அடி அகலத்துடன் அகண்ட அகழியும் ஒரு சில இடங்களில் முழுமையாக மண் மூடி விட்டாலும் மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் முழுமையாக காண முடிகிறது. இதன் மூலம் தமிழர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறையை எடுத்துக்கூறும் இலங்கியங்களில் உள்ளவாறு “உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கும் அமைவரண் என்றுரைக்கும் நூல்” என திருக்குறளின் 743 பாடல் இயம்புவதற்கிணங்கவும் , சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ள கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருந்த கருவிகள் , படைக் கலக்கொட்டில்கள் , அரண்மனை, உள்ளிட்ட அம்சங்களைக்கொண்ட மிக முக்கிய சான்றாக இக்கோட்டை உள்ளது.

  சங்ககால இலக்கியங்களில் செங்கல் 

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (405) இங்கே சுடுமண் என்பது சுட்ட மண்ணாலான செங்கலை குறிக்கிறது. இட்டிகை நெடுஞ்சுவர் என அகநானூறு ( 167 : 13) பகிர்கிறது இங்கே இட்டிகை எனப்படுவது செங்கலாகும்


கோட்டையிலிருந்த படைக்கலக் கொட்டில் பற்றிய இலக்கிய சான்றுகளும் பொற்பனைக் கோட்டையும்

 படைக்கலக்கொட்டில் என்ற பகுதி ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலைகளும் , போர்க்கருவிகளை சேமிக்கும் கிடங்காகவும் பயன்பட்ட கோட்டையின் ஒரு கட்டுமானப்பகுதியாகும். இப்பணியைச்செய்த கொல்லர்கள் பற்றி புறநானூறு (312 : 3) பாடல் “வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்கிறது. புறநானூறு பாடலில் (95) ல் அவ்வையார் தொண்டைமானிடம் வள்ளல் அதியமான் போர்த்திறம் பற்றி கூறுவதாக எழுதிய பாடலில் “இங்கே படைக்கருவிகள் மயில் தோகை அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டு திரண்ட காம்பும் , அழகுபட அமைத்து நெய் பூசப்பெற்றுக்காவலுடன் உள்ளன ஆனால் அதியமானின் படைக்கலங்களோ பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ்செய்யக்கொல்லன் உலைக்கூடத்தே கிடக்கின்றன, இதன் வழியாக அவனது வேல் கூர்மையானது என்கிறார். இதில் கூறப்பட்ட படைக்கலக்கொட்டிலும் கொல்லன் உலைக்கூடமும் ஒன்றென கருத முடிகிறது. சங்க கால நடுகற்கள் தமிழகத்தில் இதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த 5 நடுகற்களே கிடைத்துள்ளன அவற்றில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர். கா.ராஜன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள்,திரு.வி.பி.யதீஸ் குமார் மற்றும் திரு.சி.செல்வ குமார் ஆகியோரடங்கிய குழுவின் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புலிமான் கோம்பை நடுகற்கள் மூன்றும் (தேனி),தமிழ்நாடு தொல்லியல் துறையால் 2006 ஆம் பதிப்பிக்கப்பட்ட ஐ.மகாதேவன் அவர்களின் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் புத்தகத்தில் வெளிவந்த தாதப்பட்டி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (திண்டுக்கல்) அதற்கடுத்த படியாக தஞ்சை தமிழ் பலகலைக்கழக பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழு வினரால் அடையாளங் காணப்பட்ட பொற்பனைக் கோட்டை நடுகல்(புதுக்கோட்டை) ஒன்றும் உள்ளது.


  பொற்பனைக்கோட்டை நடுகல்

1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

 என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன. கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொற்பனைக்கோட்டைப் இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி

செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது. இதே போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழியும் சங்க கால வழக்கில் உருக்கு உலையை இந்நாள் வரை மரபொழியாமல் இருந்திருப்பதையும் உணரமுடிகிறது.



  உலக அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகள் கி.மு 483 ச்சார்ந்த வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கி.மு 300 எனக்கணிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீனத்தில் கி.மு 1200 எனவும் இதுவே மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகளில் பழமையானதாகவும்தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள்
 ஆச்சநல்லூர் , ஆழ்வார் திருநகரி, கொடுமணல், உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளையிட்டு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் இது சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக இதனை கருதலாம்.
  இரும்பு உருக்கு உலை தடயங்கள் 
திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. .
வலு சேர்க்கும் பிற்கால வரலாற்று சான்றுகள் 
புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.

 மேற்கோள்கள் :
 1.ஆவணம் இதழ் - 24 , பக்கம் 18, சு.ராஜவேலு த.தங்கதுரை,சா.பாண்டியன்
 2. METALLURGY OF ANCIENT ARMENIA IN CULTURAL AND HISTORICAL CONTEXT ARAM GEVORGYAN, ARSEN BOBOKHYAN Dr. Hist, Institute o f Archaeology and Ethnography, National Academy of Sciences o f Republic Armenia, argev@mail. m arsenbobokhyan@yahoo. com
3. ADICHANALLUR: A PREHISTORIC MINING SITE B SASISEKARAN*, S SUNDARARAJAN*, D VENKATA RAO*, B RAGHUNATHA RAO+ , S BADRINARAYANAN++, S RAJAVEL+++

Tuesday, October 2, 2018

திசை விளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் கல்வெட்டு - புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு



புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் வட்டம் செல்லுகுடியில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.பூவரசன் அளித்த தகவலைத்தொடர்ந்து பள்ளியின்  தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.கஸ்தூரிரங்கன் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர்  கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார், உறுப்பினர் ம.மு. கண்ணன் ஆகியோர் அக்கல்வெட்டை படித்தனர். இது கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்க்கீர்த்தியுடன் கூடிய  திசைவிளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் வணிகக்குழுவின் கல்வெட்டு என கண்டறியப்பட்டது.



மன்னருக்கு இணையாக வணிகர்கள் 

இதுவரை தென்னிந்திய வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள் தமிழகத்தில் 118 ,கர்நாடகாவில்  132 ,ஆந்திராவில்  35, மகராஷ்டிராவில் 2 கேரளத்தில்  8 எண்ணிக்கையிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து, மியான்மர் ஆகியவற்றில் நான்கும், இலங்கையில் 15 எண்ணிக்கையிலும் என  இதுவரை 314 வணிகக்குழுக்களின்  கல்வெட்டுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மன்னருக்கு இணையான உரிமைகளுடன் மதிப்புமிக்கவர்களாக வணிகர்களும், அவர்தம் பதினெண் கொடி வீரகொடியாரும் கருதப்பட்டனர். குறிப்பாக சோழர்களின் காலத்தில் இத்தகைய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனவே, பெரும்பாலும் அருகாமை நாடுகளுக்கு தூதுவர்களாக வணிகக்குழுவை சேர்ந்தவர்களையே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் வரலாற்று சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. 




கல்வெட்டின் காலம்
புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் கிடைத்த கல்வெட்டு, மன்னர்களுக்கு இணையாக திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தியுடன் உள்ளது. இதில் காலம் குறிப்பிடப்படவில்லை. எனினும் முதலாம் இராசேந்திரன் சோழன் பெயர் உள்ளதாலும், எழுத்தமைதி மற்றும் மெய்கீர்த்தியின் அடிப்படையிலும் இக்கல்வெட்டு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது. 

செல்லுகுடி வணிகக்கல்வெட்டு 
ஐந்து அடி உயரமுள்ள ஒரு கல்லின் நான்கு பக்கமும் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் 83 வரிகளுள்ளன. இதன் உச்சியில் சங்கு, செங்கோல், அரிவாள், குத்துவிளக்குகள் ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டு பழியலி கள்ளிடைக்கொடி தலைஎன எழுதப்பட்டுள்ளது. இதை இராஜேந்திர சோழன் வலங்கை தலைமையின் சிறப்புப் பெயராகக் கருதலாம்.

ஸமஸ்த புவநாதஎனத் தொடங்கும் இக்கல்வெட்டில் 7 மங்கள வரிகளில் ஸ்ரீ வாசு தேவர், கண்டழி,மூலபத்திரர் போன்றவர்களின் வழி வந்த ஐயபொழில்புர ஸ்ரீபரமேஸ்வரிக்கு மக்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
பின்பு, நிலாவைதொடும் அளவிலான மாட வீதிகளைக்கொண்ட 18 பட்டணமும் (துறைமுக நகரங்கள்), 32 வேளாபுரமும் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் அடங்கிய பாதுகாப்பான நகரங்கள்), காவல் வசதியுடன் வணிகர்களுக்கு பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளுடன் கூடிய 64 கடிகைத்தாவளமும் இருந்ததாகவும் அவ்வணிகக்குழு பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.




குழுவின் முக்கிய அங்கத்தினர்
இக்குழுவில் பலதை(வீரர்) பதினெண் கொடி வீரகொடிகொடியார், செட்டி சீர்புத்திரன்(வீரர்), கவறை (வணிகர்), காசி யவன் விடுத்த காமுண்ட சுவாமி (நிலக்கிழார்), உருத்திரந் விடுத்த ஓலை வாரியன் (கணக்கு எழுதுபவர்),சீரிய செண்டாவனும்(சிறு பணி செய்பவர்) இருந்தனர் என பொறிக்கப்பட்டுள்ளது 


ஐநூற்றுவரின் வளம் 
பலா மரங்களும்மாமரங்களும்வாழையும்பாக்கு மரங்களும்முல்லை மலர் கொடிகளும்குயிலும்கிளியும் குழுமியிருப்பதாகவும்துன்பங்கள் ஏதுமின்றிஒன்றாக கூடிஅவை மகிழ்வுடன், துன்பங்கள் ஏதுமின்றி  இருந்ததையும் அங்கே ஐந்நூற்றுவர் செங்கோலை முன்னிறுத்தி  நேர்மையுடன்,  ஆயிரம்  திசைகளிலும், செழிப்புற ஐஞ்ஞூற்றுவர் வணிக  நிர்வாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .


கல்வெட்டிலுள்ள வீரர்கள் 

பாதுகாப்பு பணியிலும்குழுவின் மிக உயர்ந்த பொறுப்பிலும் இருந்த பதினெண் கொடியார்பழ வீரசிங்கன்வலங்கை பாவாடை வீரன், கடிபுரத்து முனைவீரர் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. சிங்கன் என்ற பெயர் அரிதாகவே வணிக கல்வெட்டுகளில் காணப்படுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 

இராசேந்திர சோழ  வலங்கை வல்லபர் :
முதலாம் இராஜ ராஜன் காலத்திலேயே வலங்கை , இடங்கை அமைப்புகள் இருந்ததற்கான சாற்றுகள் கிடைத்துள்ளன, வலங்கை பிரிவில் மேம்பட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் , தொழில் புரியும் வர்க்கத்தினரும், இடங்கைப்பிரிவில் சிறு தொழில் செய்யும் குடியினரும் இருந்துள்ளதை சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. வலங்கை வல்லபர் என்ற குழுத்தலைவரே தம்மை இராசேந்திர சோழர் வலங்கை என்று அடையாளப்படுத்திக்கொள்வதோடு தனது தனி அடையாளமாக பதிநெண்கொடி வீரகொடி வலங்கை  அழைத்துக்கொண்டு இக்கல்வெட்டை பொறித்துள்ளார் . இதன்  மூலம் வலங்கை பிரிவில் முக்கியத்துவமிக்க ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார் என கருதமுடிகிறது.
கல்வெட்டின் நான்காவது பக்கம் சிதைந்த நிலையில் உள்ளபோதிலும்  இறுதி வரிகள் தெளிவாக உள்ளன, இதில்  குழுவினர் செல்லுக்குடிக்கு வழங்கிய கொடை பற்றிய செய்தியானது  “குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி  வலங்கை வல்லபர்  செல்விகுடிக்கு” என  நிறைவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூருக்கு நற்பணி செய்வதற்கான சாசன கல்வெட்டாக இதனைக்கருதலாம்.
 
கூட்டுறவுவணிகம் 
பாதுகாப்பு வீரர்களும், வணிகர்களும், கைவினைஞர்களும், சிறு தொழில் செய்வோரும், நிலக்கிழார்களும் இணைந்து உருவாக்கிய இந்த கூட்டுறவு வணிகம் நம்பகத்தன்மை உடையதாகவும், பொருள் விற்று லாபத்தின் ஒரு பகுதியை பொதுகாரியங்களுக்கு செலவிட்டிருப்பதையும், பின் வருங்காலங்களில் நிலம் உள்ளட்டவைகளின் வருவாயின் குறிப்பிட்ட பகுதியை நலத்திட்டங்களுக்கு வழங்கியிருப்பதையும் கல்வெட்டுகள் மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளதையும் அறிய முடிகிறது. பண்டைய உலக வரலாற்றில் கூட்டுறவு வணிகத்தினை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மேற்கொண்ட போதும், தெற்காசியாவை பொறுத்தவரையில் தென்னிந்திய வணிகர்களான ஐந்நூற்றுவரே தனக்கான முறையான நிர்வாக கட்டமைப்புகளுடனும், நிதி வருவாயை தமக்குள் முறையாக பகிர்ந்து கொள்வது குறித்த வரையறை கொண்டிருந்ததோடு, சூழலுக்கு ஏற்றவாறு மன்னர்களுடன் உறவை ஏற்படுத்தி செயல்படும் அரசியல் நுட்பங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்துள்ளனர். என்றார் .

                                  நன்றி
  இக்கல்வெட்டை ஆய்வு செய்ய உறுதுணையாக செல்லுகுடி பெரியவர் வீராசாமி , முன்னாள் மாணவர்  ரகுபதி , பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சஞ்சய் , நிகல்யா , ரம்யா , சிவக்குமார்  ஆகியோரும் செயற்பட்டதாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இணையத்தொடர்புகள்

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...