Saturday, February 22, 2020

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகமக்கள் புழக்கத்தில் இருந்தது தமிழ்எண்களே ! இரண்டு தமிழ் எண் மைல் கற்கள் செங்கிப்பட்டியில் கண்டுபிடிப்பு


தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில், திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின் அருகே தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட இரண்டு மைல்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் கிடப்பதாக கந்தர்வகோட்டை ஒன்றியம் குரும்பூண்டியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் , ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் து.மணிசேகரன் ஆகியோரடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் திருச்சி, தஞ்சாவூர் இடையே 1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சாலை மேம்பாட்டு பணியின் போது நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் என அடையாளம் கண்டுள்ளனர்.

இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதில் எமது குழுவினரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூழியான்விடுதி, ஆதனக்கோட்டை, அன்னவாசல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரி, தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளைநாயக்கன் பட்டி, செங்கிப்பட்டிகீரனூர் விலக்குச்சாலை ஆகிய இடங்களில் அடையாளம் கண்டுள்ளோம்,
தற்போது செங்கிப்பட்டியில் மேலும் இரண்டு மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
மைல் கல் நடப்பட்ட காலம்
ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியாக, தஞ்சாவூருக்கு செல்லும் ஏழாம் எண் சாலை,1849 ஆம் போடப்பட்டது என்றும், இது கப்பிச்சாலையாகவும், பாலத்துடனும், நல்ல நிலையில் இருந்ததாக லீவிஸ் மூர் என்ற ஆங்கிலேயர் 1878 ஆம் ஆண்டு ஜூன் 28 தேதியிட்ட மேனுவல் ஆப் தி திருச்சினாப்போளி டிஸ்டிரிக்ட்என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தச்சான்றின் மூலம் மைல்கல் நடப்பட்ட ஆண்டை உறுதிசெய்ய முடிகிறது.

தமிழ் எண் மைல் கல் கல்வெட்டு
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு மைல்கற்களும் வெவ்வேறு இடங்களில் நடப்பட்டவைஎன்பதை பொறிக்கப்பட்டுள்ள தூரத்தை அடிப்படையாகக்கொண்டு உறுதி செய்ய முடிகிறது.
முதலாவது மைல் கல் தற்போதைய செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், இரண்டாவது மைல்கல் துவாக்குடி அருகேயும் நடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
முதலாவது மைல்கல்லில், தஞ்சாவூர் 16 என அரபு எண்ணிலும், ய௪ என்று தமிழ் எண்ணிலும் ,தொடர்ச்சியாக திருச்சினாப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)18 மைல் என்பதை, ய௮ என தமிழ் எண்ணுடனும் குறிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது மைல் கல்லில் தஞ்சாவூர் 21 என அரபு எண்ணிலும் ௨ய௧ என தமிழ் எண்ணிலும் ,திருச்சிநாபளி (திருச்சிராப்பள்ளி)13 என அரபு எண்ணிலும், ய௩ தமிழ் எண்ணிலும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கல்வெட்டிலும் முதலாவதாக ஆங்கிலத்தில் ஊர்ப்பெயரும் , அதன் கீழே அரபு எண்ணில் தூரமும், இரண்டாவதாக தமிழ் எழுத்தில் ஊர்ப்பெயரும் அதன் கீழே தமிழ் எண்ணில் தூரமும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டில், எந்தக்காலம் வரை பயன்பாட்டில் இருந்தது, என்பதற்கான முக்கியத்துவமான சான்றாக உள்ளது.

தமிழ் எண் மைல்கல் ஆய்வு

எமது குழுவினரால்மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மைல்கல் கல்வெட்டில், ஆதனக்கோட்டை ய௬அதாவது 16 மைல் என்றும், தஞ்சை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை ௧௪ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வருபவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டுள்ளதை உறுதிசெய்தோம்.
தற்போது அடையாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், ஒருபக்கம் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள தன்மை , கல்லின் வடிவம் ஆகியவற்றை ஒப்புநோக்கும்போது இம்மைல்கற்கள் ஒரே காலத்திலானவை என்றும்,தஞ்சையில் தமிழ் மற்றும் அரபு எண்களும், புதுக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண்களும், இருப்பது
நோக்கத்தக்கது.
இதன் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்றிருந்ததும், தஞ்சை, திருச்சி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் அரபு எண்கள் முன்னிலைப் பெற்றிருந்திருப்பதையும், அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் எண்களின் பயன்பாடும் வீழ்ச்சியும்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோமன் மற்றும் அரபிய எண்கள் வெளிநாட்டவருக்கான எண்ணாகவும், மக்கள் பயன்பாட்டில்தமிழ் எண்கள் மட்டுமே இருந்துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான தொல்லியல் சான்றாக, தமிழ் எண் மைல்கல்  கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான்மக்கள்பயன்பாட்டிலிருந்துவழக்கொழிந்து போயிருக்கிறது  என்பதை உணர முடிகிறது,என்றார்.



1 comment:

  1. முனைவர் பட்ட ஆய்வாளர், வரலாற்றறிஞராக பரிணமிப்பதை தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....