Sunday, September 5, 2021

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர் பாசன பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த பொற்கொல்லர் புதுக்கோட்டை மேலூர் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிப்பு



         புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார். இதில் தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

 தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழிக்கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

              பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்,திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

 குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராசேந்திரன் அவர்களால் கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

        இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

 

குமிழிக்கல்வெட்டுகள்

 புதுக்கோட்டையின் கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழி கல்வெட்டு காணப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் நொடியூரில் உள்ள கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த முதலாம் ஆதித்தன் சோழன் ஆட்சிக்காலத்தில் மங்கல நல்லூர் என்றழைக்கப்பட்ட தற்போதைய மங்கனூரைச்சேர்ந்த இரணசிங்க முத்தரையன் என்பவர் மருதனேரிக்கு குமிழி அமைத்துகொடுத்த கல்வெட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளோம்.

 கம்மாளர்களின் சிறப்பு

பழங்கால அறிவியல் , எண்கணிதம், வானியல் நகர்வுகள் அடிப்படையில் நன்கு தேர்ந்த கட்டுமான அறிவை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். செப்பு , இரும்பு , தங்கம், மரம் , கல் என ஐந்து தொழில்நுட்பத்திலும் திறம்பட இயங்கிய கன்னார் , கொல்லர், தட்டார், தச்சர், கற்தச்சர் என  ஐந்தொழிலை அடிப்படையாக கொண்டவர்களாக சங்க. இலக்கியங்களிலும் பழங்கால சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது.

பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான. பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்று அழைக்கப்படுகின்றனர்.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குண்டூர் பெருங்குளத்தில் முதலாம் ஆதித்த சோழன் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குண்டூர் பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவர் குமிழி அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 தட்டான் என அழைக்கப்படுவோர் சோழர் காலத்தில் பொன்னிலும் வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண்கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்திற்கான தட்டார்கள் பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சான்றாக திருவையாற்றில் உள்ள முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டு உலகமகாதேவி ஈசுவரம் கோயில் பணிக்கெனச் சக்கடி சமுதையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டான் அதாவது செம்பியன் மாதேவியருக்கான ஆபரணங்கள் செய்வதை தனிப்பணியாகக் கொண்டவருக்கு தட்டாரக்காணி வழங்கப்பட்டதையும். திரிபுவனியில் உள்ள முதலாம் இராசாதிராசனின் கல்வெட்டு தட்டாரக் காணியாக இரண்டு வேலி நிலத்தினை அரங்கன் கோமாரனான இராசராசப் பெருந்தட்டான் என்பவருக்கு வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

 

மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார் பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு  தெரிவிக்கிறது.

 மேலூர் பெருமடைக்கால் புதிய கல்வெட்டு

 புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மேலி(ழி)க்கண்மாயின் பெரிய குழுமிக்கருப்பர் கொம்படி ஆலயத்தின் அருகேயுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்" அதாவது

சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய  கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கணிக்கலாம். இந்தக்கல்வெட்டின் மூலமாக பொதுமக்களும் தொழில் புரிவோரும் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் பயிர்த்தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    




தமிழகத்தில்  சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன         கட்டமைப்புகளை    ஏற்படுத்துவதிலும்  சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும் என்றார்.

   மேலும் இக்கல்வெட்டு வாசிப்பை உறுதி செய்த மூத்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.ராஜகோபால் ,  படியெடுக்கும் போது உதவி புரிந்த முருக பிரசாத் ,ராகுல் பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோருக்கு  நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

Sunday, August 23, 2020

மங்களாகோவில் கிராமத்தில் அக்னி ஆற்றுக்கு வடபுறமுள்ள விவசாய நிலத்தில் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு .

 

மங்களாகோவில் மகாவீரர் சிற்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் ,  மங்களாகோவில் கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பிள்ளையார் குள கரைக்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் சமண சிற்பம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.  இச்சிற்பம் அவ்வூர் மக்களால் அய்யனார், காளி என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிற்பம் குறித்து ஆய்வு செய்ய உள்ளூர் தொழிற்சங்க நிர்வாகி உ. அரசப்பன் அளித்த தகவலைத்தொடர்ந்து நமது கள ஆய்வில் கீழ்க்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமணர் சிற்பம் ஒன்றரை அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன்,  நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று  தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.  விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது .

 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையம் தெளிவற்று சிதைந்தும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்   முக்குடை சிதைந்துள்ளதால் தெளிவற்று இரண்டு குடைபோல தோற்றமளிக்கிறது, பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,  இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி பதினொன்றாம்  நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம்.  

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ,  கறம்பக்குடி, திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,

அக்கினி ஆறானது மிகப்பழமையானதாகும், இது  அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும், ஆற்றின் பெயரும் சமணக்கொள்கையோடு  தொடர்புடன் இருப்பதையும், சமண சமயம் செழித்திருந்த ஆற்றுப்படுகையாக இருந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  

மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் கந்தர்வகோட்டை கீழ வாண்டான் விடுதி சிவனார் திடல் என்ற சமணர் திடலில் செங்கல் கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும் , நான்கரை அடி உயரமுடைய சமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மங்களாகோவில் சமணர் சிற்பமும் அவ்விடத்திற்கு மிக அருகில் உள்ளது. அதுமட்டுமின்றி  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர், வைத்துக்கோவில், பெருங்களூர்  உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் சமணப்பள்ளிகள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் வலுசேர்க்கும் சான்றுகளாக உள்ளது. 

இந்த களப்பணியின் போது வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ராஜேஷ், தி.மாதரசு, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  க.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது மகாவீரர் சிற்பம் கந்தர்வகோட்டை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு கந்தர்வகோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்படுள்ளது.




 

 

 

 

Monday, July 6, 2020

தமிழகத்தில் 2200 ஆண்டுகளாக தொடரும் சித்தர் மரபு - தமிழிக்கல்வெட்டு சான்று, ஒரு பார்வை

ஆ.மணிகண்டன் , வே.ராஜகுரு 

கிண்ணி மங்கலம் சித்தர் மரபு  :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களுக்கு கல்விகலைமருத்துவம்வானவியல்ரசவாதம்போர்ப்பயிற்சிராஜதந்திரங்கள்ராஜயோகம் என 16 விதமான கலைகளைக் போதித்து, பரம்பரையாக 66 குருமார்களையும் இதே இடத்தில் சமாதியாக்கி வந்திருக்கின்றனர். தற்போது குருகுலத்தில் 67 ஆவது குருவாக திரு. அருளானந்த சுவாமிகள் உள்ளார்.

முன்னோர்களை சமாதி ஆக்கும் போது லிங்கம் வைத்து பள்ளிப்படை ஆக்குவதும் அவர்களை அந்த உருவிலேயே வணங்கி வருவதும் மரபுஅதனை தொடர்கிறார்கள். சங்க காலத்தில் எவ்வாறு குருகுலம் செயல்பட்டு வந்ததோ அதே போன்று இன்றளவும் கட்டணமின்றி  மக்களுக்கு கல்விகலை மற்றும் தொழில் நுணுக்கங்களைபோர்த் தந்திரங்களை உள்ளிட்ட தமிழர் கலைகளை கற்றுத்தரும் மையமாக உள்ளது.

கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்த அறிமுகம் :

கிண்ணி மங்கலம் தமிழிக்கல்வெட்டை மரபு ஆர்வலர்கள் திரு ச.ஆனந்தன் ,திரு. இரா. இராஜவேல், பாறை ஓவிய ஆய்வாளர் திரு. காந்திராஜன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வெட்டு அமைந்துள்ள இடம் : 

 கல்வெட்டு மதுரை கிண்ணிமங்கலத்தில் கிடைத்திருக்கும் தமிழிக் கல்வெட்டு மதுரைக்கு மேற்கில் சுமார் 20 கிமீ தொலைவில் செக்காணூரணி திருமங்கலம் சாலையில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதன் குருகுல வளாகத்தில் உள்ளது.


 


கல்வெட்டின் காலம் :.

எழுத்து வடிவத்தைக் கொண்டு கிமு. மூன்றாம் நூற்றாண்டாகக் கணிக்க வாய்ப்புண்டு என கல்வெட்டை கண்டுபிடித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டு :

 கல் தூணில் தமிழி கல்வெட்டு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை, தமிழி கல்வெட்டு 26 செ.மீ அகலமும் 56 செ.மீ உயரமும்நான்முகத்துப் பாதமும், அறுபட்டைத் கம்புப்பகுதியும் கொண்ட கொண்ட தூண். அறுபட்டை ஆரம்பிக்கும் இடத்தில் மூன்று முகமுத்திலும் முதல் வரியில் ஏ க ன் ஆ த ன்” எனவும் இரண்டாவது வரியாக கோ ட் ட ம்” என உள்ளது.

 மடத்தில் கிடக்கும் மற்றொரு கல்வெட்டு ஒரு அடி நீள அகலம் கொண்டது. கருங்கல்லின் முகப்புப் பகுதியில் இறையிலியாக ஏகநாதன் பள்ளிப்படை மண்டளி யீந்தார்

என்ற வாசகம் ஐந்து வரிகளாகப் பொறிக்கப் பட்டுள்ளது. நன்காவது வரி முடிவில் பாண்டியர் சின்னமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் கிண்ண வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

       


 சித்தர் மரபின் சிறப்பு :

 தமிழர் வாழ்வியல் வரலாற்றில் இந்த தமிழிக்கல்வெட்டு புதிய பரிமாணத்தை தரவல்லது. பல்வேறு பண்பாட்டு முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறது. இந்தக்கல்வெட்டு வாசிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த கல்வெட்டில் ஏகநாதன் கோட்டம் என்ற செய்தி பொறிப்பு உள்ளது என 67 ஆவது சித்த மடத்தலைவர் அருளானந்தம் கூறிய செய்தி,  கல்வெட்டிலும் அப்படியே பொறிக்கப்பட்டிருந்தது, கல்வெட்டை வெளிப்படுத்திய தொல்லியல் ஆர்வலர்களுக்கு வியப்பை தந்துள்ளது. 

    இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில் ஏகன் ஆதன் கோட்டம்’ என எழுதப்பட்டுள்ளது குறித்து கல்வெட்டின் எழுத்துருக்களை வாசிக்கத்தெரியாத மடத்தின் சித்தர் எப்படி கூற முடியும் , அதற்கு அந்த சித்தரின் பதில் இங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும் பற்றிய தகவல் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது, என்கிறார்.

    எனில் 16 வகையான கலைகள் கற்றுத்தரப்படுவதுபோல  சுமார் இராண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் உள்ள செய்தி வரை செவி வழி கற்பித்தலாக சித்தர் வழி மரபுக்கு  கடத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

   இரண்டாயிரம் ஆண்டுகளாக இயங்கும் மருத்துவ சாலை , கல்விச்சாலை , சித்தர் மரபு , போர்க்கலை பயிற்சி மையம் இதுவே எனும்போது பிரமிப்பாக உள்ளது.

முன்னோர் வழிபாடும் வளர்ச்சியும் :

    உலகலாவிய பண்பாட்டு மரபைப் பொறுத்தவரையில், முன்னோர்களை வழிபடும் முறைதான் முந்தி நிற்கிறதுஅதே  அடிப்படையில் தமிழகத்திலும் மூன்னோர்  வழிபாட்டு முறைதான் பின்னாளில் கோயில் கட்டுமானத்திற்கான அடிப்படை என்பதை விளக்குகிற விதத்தில்,  தமிழர் வரலாற்றில் கல்வெட்டு சான்றுடன் கூடிய ஒரு தொடர் சந்ததியாக இங்கு வசிப்பவர்களையும் அவர்களின் முன்னோர்களையும் நாம் கருதலாம்.

இராண்டாயிரம் ஆண்டு மரபும் , கல்வெட்டு சான்றும்     

இந்திய அளவில் பல வழிபாட்டு தலைமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வருவதாக கூறி வந்தாலும் அவற்றை தொல்லியல் ரீதியில் உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 2000 ஆண்டுகளுக்கு மேம்பட்ட ஒரு சந்ததி தொடர்பினைக் கொண்டது ஏகநாதன் சித்தர் மடம்  கல்வெட்டு சான்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரே சித்தர் மரபாக உள்ளது.

 கந்து வழிபாடு :

  தமிழிக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தூண் தமிழர் மரபுப்படி அடிப்பகுதி நான்கு பக்கங்களும்,  அதன் மேற்புறத்தில் எண்பட்டைகளையும் கொண்ட லிங்க வழிபாட்டு முறையின் முன்னோடியான கந்து (கல்தூண்) வழிபாட்டு தூணாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

 கோட்டமும் சித்தர் மரபும் : 

 கோட்டம் என்ற சொல் கோவில்,  சொல்லுக்கு அரசன் வீடாகிய அரண்மனைதெய்வ வீடாகிய திருக்கோவில்துறவியர் தங்கும் மடம் ஆகிய பொருளுமுண்டு. கோட்டம் என்ற சொல்லுக்கு கோவில் என்ற பொருளுடன்  புறநானூறு  299 ஆம் பாடலில் முருகன் கோட்டம் பற்றி குறிப்பிடப்படுகிறது. மணிமேகலையில்  "சுடு மண்ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்" (மணிமே.6:54 - 59) என்கிறது .

கோட்டமும் தமிழர் வழிபாடும் :

தமிழர் வழிபாட்டு முறை சார்ந்த பல்வேறு கருதுகோள்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழர்களின் கட்டிடக்கலை மரபு குறித்து முறையான சான்றுகள்  ஏதுமின்றி இருந்த நிலையில் இந்த கல்வெட்டு கட்டிடக்கலை கட்டுமான மரபு சார்ந்த எண்ணங்களை மாற்றியமைக்கும். கோட்டம் என்ற சொல்லாடல் இலக்கியங்களில் கட்டுமானமாக பயின்று வருவதை இந்தக்கல்வெட்டு உறுதி செய்கிறது. மேலும் இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழகத்தின் பல இடப்பெயர்களை மீளாய்வு செய்ய இயலும் உதாரணமாக ஆதனக்கோட்டை என்ற ஊர் அங்கிருந்த ஆதன் கோட்டை என்றிருந்து பின்னாளில் மாறியிருக்கும் என நிறுவ முடியும். 

 ஆதன், நாதனது  ஆனது எப்படி  ?  

கீழடி, கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் ஆதன் என்ற சொல் பயின்று வருகிறது. 

இதன் மூலம்  குழுவின் தலைவர் , மன்னன் இவர்களோடு கலைகளை கற்றுக்கொடுத்த சித்தரும், ஆதன் என்று அழைக்கப்பட்டிருப்பது இக்கல்வெட்டு சான்றின் மூலம் உறுதியாகிறது.

       அதுமட்டுமின்றி இந்த கல்வெட்டில் சொல்லப்பட்ட ஏகன் ஆதன் கோட்டம் என்ற சொல்லாடல் பின்னாளில் ஏகநாதன் பள்ளிப்படை என்றும் தொடர்ச்சியாக ஏகநாதர் திருக்கோவில் என்று  மாறியிருப்பதையும் கருத்திற்கொண்டு  ஆதன் என்ற சொல்லாடலே தமிழ் இலக்கணப் பிணைப்பு விதியின்படி ஏகன் ஆதன் என்பது ஏகனாதன் என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது, என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

 

     இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் இன்னும் பிற கோவில்களின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்கால தமிழ் சொற்களின் முன்னொட்டும் ஆதன் என்ற பின்னொட்டுடன் இணைந்து (னாதன்) நாதன் என்ற சொல்லாக திரிபடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

மதுரை மன்னன் சொக்கன் ஆதன்   

 சொக்கன் ஆதன் என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் சொக்கநாதன் என ஆகியிருக்கிறது என்றும் நாகன் ஆதன் என்ற பெயர் நாகநாதன் என்றும், கயிலாயன் ஆதன் கயிலாயநாதன் என்றும், ராமன் ஆதன் ராமநாதன் என்றும்,  இந்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவ முடியும்.

 

 எனவே தமிழ்மொழி வரலாற்றில் தமிழ் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுவிட்டன என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஆதன் என்ற பெயரில் மன்னர்கள் 

           ஆதன் என்ற சொல் மன்னனனை குறிக்கும் சொல்லாக உள்ளது.  இந்த வழக்கம் சேரர்களிடையேயும் , பாண்டியர்களிடையேயும் உள்ளது.

  உதாரணமாக சேரல் ஆதன் சேரலாதன் என்றும் ,வாழி ஆதன் வாழியாதன் என்றும், ஆதன் உங்கன் ஆதனுங்கன்  என்றும் வழங்கி வந்துள்ளதை சான்றாக கொள்ளலாம் .

    இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிப்பதோடு மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழி கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளை தரும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை மூலம்:.ஆனந்தன் அவர்களின் செய்தி குறிப்பு  

மேற்கோள்கள் : 

1.கிண்ணிமடம் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்த நாளிதழ் செய்திகள் 

2.கொடுமணல் , கீழடி, அரிக்கமேடு, அகழ்வாய்வு முடிவுகள் 

கட்டுரையாளர்கள் :

ஆ.மணிகண்டன் , முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ் பலகலைக்கழகம் ,தஞ்சாவூர்.

வே.ராஜகுரு, முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்நாடு திறந்தநிலை பலகலைக்கழகம் ,சென்னை 



தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...