Wednesday, May 22, 2019

பொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ தொலைவில் அமைந்துள்ளது


  பொற்பனைக்கோட்டையின் அமைப்பு




வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது, கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

  பொற்பனைக்கோட்டை சங்க கால கோட்டைகளுக்கான நிகழ்காலச் சான்று
சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட மாடமாளிகைகளும் கோட்டை கொத்தளங்களும் முழுவதும் அழிந்துவிட்டதாக கடந்த பத்தாண்டுகள் வரை அனைத்து ஆய்வாளர்களும் நம்பி வந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்றளவும் கோட்டைச்சுவர் அழியாமலும் , அதில் பயன்படுத்தப்பட்ட களிமண் சங்ககால செங்கல் கட்டுமானம் கோட்டைச்சுவரின் நான்கு அடி அகலமுள்ள சுற்று சுவர் மற்றும் கோட்டை கொத்தளத்தின் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமலும் உள்ளது. மேலும் கோட்டையைச் சுற்றிலும் சுமார் 15 ஆழமான, சுமார் 40 அடி அகலத்துடன் அகண்ட அகழியும் ஒரு சில இடங்களில் முழுமையாக மண் மூடி விட்டாலும் மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் முழுமையாக காண முடிகிறது. இதன் மூலம் தமிழர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறையை எடுத்துக்கூறும் இலங்கியங்களில் உள்ளவாறு “உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கும் அமைவரண் என்றுரைக்கும் நூல்” என திருக்குறளின் 743 பாடல் இயம்புவதற்கிணங்கவும் , சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ள கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருந்த கருவிகள் , படைக் கலக்கொட்டில்கள் , அரண்மனை, உள்ளிட்ட அம்சங்களைக்கொண்ட மிக முக்கிய சான்றாக இக்கோட்டை உள்ளது.

  சங்ககால இலக்கியங்களில் செங்கல் 

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (405) இங்கே சுடுமண் என்பது சுட்ட மண்ணாலான செங்கலை குறிக்கிறது. இட்டிகை நெடுஞ்சுவர் என அகநானூறு ( 167 : 13) பகிர்கிறது இங்கே இட்டிகை எனப்படுவது செங்கலாகும்


கோட்டையிலிருந்த படைக்கலக் கொட்டில் பற்றிய இலக்கிய சான்றுகளும் பொற்பனைக் கோட்டையும்

 படைக்கலக்கொட்டில் என்ற பகுதி ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலைகளும் , போர்க்கருவிகளை சேமிக்கும் கிடங்காகவும் பயன்பட்ட கோட்டையின் ஒரு கட்டுமானப்பகுதியாகும். இப்பணியைச்செய்த கொல்லர்கள் பற்றி புறநானூறு (312 : 3) பாடல் “வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்கிறது. புறநானூறு பாடலில் (95) ல் அவ்வையார் தொண்டைமானிடம் வள்ளல் அதியமான் போர்த்திறம் பற்றி கூறுவதாக எழுதிய பாடலில் “இங்கே படைக்கருவிகள் மயில் தோகை அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டு திரண்ட காம்பும் , அழகுபட அமைத்து நெய் பூசப்பெற்றுக்காவலுடன் உள்ளன ஆனால் அதியமானின் படைக்கலங்களோ பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ்செய்யக்கொல்லன் உலைக்கூடத்தே கிடக்கின்றன, இதன் வழியாக அவனது வேல் கூர்மையானது என்கிறார். இதில் கூறப்பட்ட படைக்கலக்கொட்டிலும் கொல்லன் உலைக்கூடமும் ஒன்றென கருத முடிகிறது. சங்க கால நடுகற்கள் தமிழகத்தில் இதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த 5 நடுகற்களே கிடைத்துள்ளன அவற்றில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர். கா.ராஜன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள்,திரு.வி.பி.யதீஸ் குமார் மற்றும் திரு.சி.செல்வ குமார் ஆகியோரடங்கிய குழுவின் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புலிமான் கோம்பை நடுகற்கள் மூன்றும் (தேனி),தமிழ்நாடு தொல்லியல் துறையால் 2006 ஆம் பதிப்பிக்கப்பட்ட ஐ.மகாதேவன் அவர்களின் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் புத்தகத்தில் வெளிவந்த தாதப்பட்டி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (திண்டுக்கல்) அதற்கடுத்த படியாக தஞ்சை தமிழ் பலகலைக்கழக பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழு வினரால் அடையாளங் காணப்பட்ட பொற்பனைக் கோட்டை நடுகல்(புதுக்கோட்டை) ஒன்றும் உள்ளது.


  பொற்பனைக்கோட்டை நடுகல்

1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

 என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன. கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொற்பனைக்கோட்டைப் இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி

செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது. இதே போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழியும் சங்க கால வழக்கில் உருக்கு உலையை இந்நாள் வரை மரபொழியாமல் இருந்திருப்பதையும் உணரமுடிகிறது.



  உலக அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகள் கி.மு 483 ச்சார்ந்த வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கி.மு 300 எனக்கணிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீனத்தில் கி.மு 1200 எனவும் இதுவே மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகளில் பழமையானதாகவும்தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள்
 ஆச்சநல்லூர் , ஆழ்வார் திருநகரி, கொடுமணல், உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளையிட்டு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் இது சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக இதனை கருதலாம்.
  இரும்பு உருக்கு உலை தடயங்கள் 
திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. .
வலு சேர்க்கும் பிற்கால வரலாற்று சான்றுகள் 
புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.

 மேற்கோள்கள் :
 1.ஆவணம் இதழ் - 24 , பக்கம் 18, சு.ராஜவேலு த.தங்கதுரை,சா.பாண்டியன்
 2. METALLURGY OF ANCIENT ARMENIA IN CULTURAL AND HISTORICAL CONTEXT ARAM GEVORGYAN, ARSEN BOBOKHYAN Dr. Hist, Institute o f Archaeology and Ethnography, National Academy of Sciences o f Republic Armenia, argev@mail. m arsenbobokhyan@yahoo. com
3. ADICHANALLUR: A PREHISTORIC MINING SITE B SASISEKARAN*, S SUNDARARAJAN*, D VENKATA RAO*, B RAGHUNATHA RAO+ , S BADRINARAYANAN++, S RAJAVEL+++

Thursday, December 27, 2018

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருடர்களிடம் தப்பிய தீர்த்தங்கரர் சிற்பம் - புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி ஆற்றங்கரை அருகே சமணப்பள்ளி கட்டுமானம் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களுடன் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி கீழ வாண்டான் விடுதி கிராம எல்லைக்குட்பட்ட சிவனார் மேடு என்ற இடத்தில் சுமார் 97 சென்ட் அளவிற்கு செங்கல் கட்டுமானத்தின் சிதிலங்களும் , மிகச்சிறிய அளவிலான தாமரை மீதமர்ந்த பத்மபிரபர் எனும் சமண தீர்த்தங்கரரின்  தலை சிதைந்த  சிற்பமும், இந்த இடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு  கீழ வாண்டான்விடுதி  நம்பிராஜன் குடும்பத்தினரால் சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள  ஐந்து அடி உயரமுள்ள மகா வீரர்  சிற்பமும்    தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் , தலைவர் கரு.ராஜேந்திரன் ,ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் , மரபு நடை ஒருங்கிணைப்பாளர்  கஸ்தூரி ரங்கன் , ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , பா.ரமேஷ்குமார்,ஆத்தங்கரைவிடுதி உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் பழனிசாமி , கண்ணன் ஆகியோரடங்கிய குழுவினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியின் வரலாற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் இது சார்ந்த  களப்பயணத்தின் போது பதிவு செய்யப்படாத வரலாற்று சான்றுகளை தொகுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தற்போது பத்தாம் பத்தாம் நூற்றாண்டில் இயங்கிய சமணப்பள்ளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி  திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,


அக்கினி ஆறானது மிகப்பழமையான ஆறாக கருதப்படுகிறது. மேலும் இது  கடந்த காலங்களில் அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும் , அஞ்ஞானத்திற்கு இணையாக வழங்கப்படும் அக்கியானி என்ற சொல் மருவி அக்னி ஆறு என்று பெயராக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிகிறது.
இந்த ஆற்றின் பெயரே சமணக்கொள்கையை தங்கியிருப்பதாக கருத முடிகிறது.  மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில்  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர் , உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் தற்போது கீழ வாண்டான் விடுதியிலும் சமணப்பள்ளி அடையாளப்படுத்தபட்டிருப்பதன் மூலம் இந்த ஆற்றங்கரையில் சமணம் பரவி இருந்தது சார்ந்து புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.
சமணப்பள்ளி அமைவிடம்
கீழ வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லைப்பகுதியில் அக்கினி ஆற்றின் தென் புறத்தில்  அமைந்துள்ள சிவனார் திடல் என்று அப்பகுதியினரால் அழைக்கப்படும் இடத்தில் சுமார் 97 சென்ட் பரப்பளவில் 200 அடி  நீள அகலத்துடன் செங்கல் கட்டுமான மேடு காணப்படுகிறது. ஒரு இடத்தில் “ ப ” வடிவ அறையின் அடிமானச்சுவரின் மேற்பகுதி 3 அடி 9  அங்குலத்துடன் உள்ளது , கீழ்ப்புறத்தின்  இரண்டு சுவர்களும் 2 அடி  6 அங்குலம் கொண்டவையாக உள்ளன , இந்த அறையின் உட்கூட்டுப்பரப்பளவு 9 அடி  5 அங்குலத்துடன் உள்ளது . புதிதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சிற்பங்களும் இவ்விடத்தில் இருந்துள்ளதன் மூலம் இந்த செங்கல் கட்டுமானம் சமணப்பள்ளிதான் என உறுதி செய்ய முடிகிறது.



சமணப்பள்ளி கட்டுமானம் 

17x  16x 3 செ.மீ , 22 x 13.5x 4 செ.மீ, 24x 12x3  செ.மீ   உள்ளிட்ட  அளவுகளைக்கொண்ட  செங்கல் அதிகமாக சிதறி காணப்படுகிறது. இவை கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகை மேட்டில் இருந்த செங்கல் அளவுகளோடு ஏறக்குறைய ஒத்துள்ளது ஆனால்  இப்பகுதியில் சுண்ணாம்பு படிமங்களோ , வேறு எந்த கட்டுமான இணைப்பு கற்காரைகளோ  காண முடியவில்லை எனவே இது பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முந்தைய  செங்கல் கட்டுமானமாக இருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது. ஒரு சில இடங்களில் செம்புராங்கல் காணப்படுகிறது இது கட்டுமானத்தின் அடித்தளமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இது முழுக்க செங்கல் மற்றும் களிமண் கொண்ட கட்டுமானமாக இருந்துள்ளதையும், இந்த சமணப்பள்ளி  கற்றளியாக மறு உருவாக்கம் செய்யப்படாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது.


கீழ வாண்டான் விடுதி மகாவீரர்

கீழ வாண்டான்விடுதியில் தற்போது சிவனார் என்ற பெயரில்  வழிபாட்டிலுள்ள சிற்பம் ஐந்து அடி உயரம் மூன்று அடி அகலம் கொண்டதாக உள்ளது.  இது வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திருமேனி என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , புன்முறுவலுடன் கூடிய உதடுகள் ,  விரிந்த மார்புடன்  அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது .
 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்     முக்குடையும் , பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,    இச்சிற்பம் மகாவீரர் என்பதை  உறுதிப்படுத்தும் அடையாளமான சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்துள்ளதாக அறிய முடிகிறது .



கீழவாண்டான் விடுதி மிகச்சிறிய தீர்த்தங்கரர் சிற்பம்

அடையாளங்காணப்பட்ட மற்றொரு சமண தீர்த்தங்கரர்  சிற்பம் மிகச்சிறிய அளவில் 17   சென்டிமீட்டர்   உயரம் கொண்டதாகவும் ,  தலை சிதைந்த நிலையில், தாமரை மேல் அமர்ந்த தியான  நிலையிலுள்ளது, எனவே  ஆறாவது தீர்த்தங்கரரான   பத்ம பிரபராக இருக்கலாம் என கருத முடிகிறது. எனினும் சமணப்பள்ளிகளில் மகாவீரர் மற்றும் ஆதிநாதரின் சிற்ப தொகுதிகளே வழிபாட்டிலிருந்துள்ளதாலும், தென் கயிலையில் தாமரை மீது அமர்ந்த நிலையில் ஆதிநாதர்   தவமிருந்ததாக சொல்லப்படும் சான்றுகள் மூலம் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிற்பமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.


சிற்பத்தின் வலப்புறம் அமைந்துள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டிமீட்டர் அளவில் மிக நுணுக்கமான முறையில்  மண்டியிட்டவாறு சாமரம் வீசுவதாக  வடிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள இயக்கியரின் சிற்பம்  சிதைந்துள்ளது.


தாமரை மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும்  கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள் காட்டப்பட்டுள்ளது. இதில்  மண்டியிட்டு கை கூப்பிய நிலையில் தனித்தனியாக நான்கு  மனித உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 


திருடர்களிடம் தப்பிய சிற்பம்

சிவனார் மேடு என்ற இடத்தில் இருந்த ஐந்தடி உயரமுள்ள தீர்த்தங்கரர் சிற்பம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மாட்டு வண்டி மூலம் கடத்திச் சென்றுகொண்டிருந்த  சிலை திருடர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவாலும், மாடுகள் மயக்கமடைந்ததாலும்,உயிர் பயத்தால்  கடத்தி வந்தவர்கள் ,  தீர்த்தங்கரர் சிற்பத்தை ஆத்தங்கரை விடுதி வயல் வெளியில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட அதனை ஆத்தங்கரைவிடுதி அம்பலக்காரர் தனது பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் . இதையறிந்த நம்பிராஜனின் குடும்பத்தினர் தாங்கள் வழிபட்டு வந்த  சாமியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு பெற்று வந்து அதனை சிறு கோயிலாக எழுப்பி வழிபட்டு வருவதாகவும் வழிபட்டு வருபவர்கள் கூறுகின்றனர், இது போன்ற நம்பிக்கை கதைகளே பல சிற்பங்களுக்கு காவலாக இருந்து வருகிறது .




  

Sunday, November 4, 2018

இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை ஆசிரியர்களுக்கு கொடும்பாளூர் முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியில் இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட  ஆசிரியர்களுக்கு மூன்று நாள் கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் மாவட்டக்கருத்தாளர் சந்திர சேகரன் ஒருங்கிணைப்பில் நடந்தது.

 இரண்டாம் நாள் பயிற்சிக்கு சிறப்பு கருத்தாளர்களாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர்  கரு.ராஜேந்திரன் , நிறுவனர் ஆ.மணிகண்டன் பங்கேற்று  கொடும்பாளூர் மூவர் கோவில், ஐவர் கோவில் ,இதில்  முதுகுன்ற முடையார் கோவில் ஆகிய இடங்களின் வரலாற்று பின்னணிகள பகிர்ந்துகொண்டனர்.

முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக மறைந்து கிடந்த இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மூவர் கோவில் பூதி விக்கிரம கேசரியாலும், முது குன்ற முடையார்ப் என கல்வெட்டுகளில் உள்ள முசுகுந்தேஸ்வரர் கோவில் மகிமாலைய இருக்கு வேள் என்பவரால் முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது, அது மட்டுமின்றி மணிக்கிராமம் எனும் வணிகக்குழுவின் தலைநகராக விளங்கிய கொடும்பாளூர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும், இவ்வூரில் பல நூற்றுக்கணக்கான வரலாற்று சான்றுகள இன்னும் அறியப்படாமலேயே உள்ளன, அவற்றின் ஒரு பகுதியாக  இரண்டு கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் மங்கல வரியுடன் “கோப்பரகேசரி பந்மரான சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்குயாண்டு 17 ஆவது (இரட்டைபாடி கொண்ட சோழ வள நாட்டு” என்று குலோத்துங்க சோழரின் பதினேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட முற்று பெறாத துண்டு கல்வெட்டும், கொற்றக்குடைப்பன்மமை முந்நூற்றுவரும் பக்கல் ...வலப்பாடி நிலத்துள் கரைக்கிழச்செய்யும் வே(லை)  என்று பொறிக்கப்பட்ட வணிகக்குழுவின் கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.





தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...